தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 7:26 PM IST

ETV Bharat / state

மனைவியிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? - தன் மீதான விமர்சனத்திற்கு சரத்குமார் தன்னிலை விளக்கம்!

Sarathkumar Self Explanation: 'இரவு தூக்கம் வரலையாம்.. மனைவியிடம் கருத்து கேட்டாராம்' என்று சொல்கிறார்கள், மனைவியிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது என்று சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்த நிலையில் தன் மீது எழுந்த விமர்சனம் குறித்தது சரத்குமார் தன்னிலை விளக்கமும், பத்திரிகையாளர் சந்திப்பில் பதிலும் அளித்துள்ளார்.

Sarathkumar Self Explanation
Sarathkumar Self Explanation

சென்னை: சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருந்த சரத்குமார், நேற்று (மார்ச் 12) பாஜகவில் இணைந்த நிலையில், இன்று (மார்ச் 13) சென்னை கிண்டியில் உள்ள லீ மெரிடியன் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "3வது முறையாக பிரதமராக மோடி வர வேண்டும் என்ற ஒரே நோக்கோடு, இவர்களோடு இணைந்து செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தோடு வந்துள்ளேன். தொடர்ந்து கட்சி மேலிடம் என்ன சொல்கிறது என்பதை பொறுத்து கருத்துகளை கேட்டு செயல்படுவேன்" என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, "பாஜக முன்னோடிகள் சொல்வதைச் செய்யத் தயாராக இருக்கிறேன். அவர்கள் இடும் கட்டளையை செயல்படுத்துவேன். கூட்டணியில் இருக்கும் போது எத்தனை தொகுதிகள் வேண்டும் என்று கேட்கலாம். ஆனால் கட்சியில் இணைந்த பிறகு, அவர்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்" என்று பதிலளித்தார்.

அதன் தொடர்ச்சியாக, பாஜகவோடு இணைய கட்சி நிர்வாகிகளைக் கேட்டு முடிவெடுக்கவில்லை என விமர்சனம் எழுவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆக்கப்பூர்வமான மற்றும் அறிவுப்பூர்வமான விமர்சனங்களுக்குப் பதில் சொல்லலாம். வைரலாக்க வேண்டும் என்ற ஆசையோடு செய்து கொண்டிருக்கிறார்கள். 'இரவு தூக்கம் வரலையாம், மனைவியிடம் கருத்துக் கேட்டாராம்' என்று சொல்கிறார்கள். மனைவியிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? இந்த கருத்துக்கு செவி சாய்க்க வேண்டுமா?

ஒரே ஒரு கட்சி நிர்வாகிதான் அப்படிப் பேசி இருந்தார். அவர் மீண்டும் பேசிய வீடியோவில் 'காலதாமதமாக வந்ததால் தெரியாமல் சொல்லிவிட்டேன்' என்று சொல்லி இருப்பார். அவர் அறியாமல் செய்த தவறை அவர் உணர்ந்து வந்து மன்னிப்பு கேட்டுவிட்டார். இதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும், தேவையும் இல்லை. நேரத்தை வீணாக்க விருப்பம் இல்லை" என்று விளக்கமளித்தார்.

மேலும், பாஜகவில் உங்களுக்கு பொறுப்பு வழங்கப்படுமா என்றும், பாஜகவில் இணைந்த பிறகு நீங்கள் பாஜக மாநில தலைவராகவோ, முதலமைச்சர் வேட்பாளராகவோ ஆக வேண்டும் என கோரிக்கைகள் எழுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "நான் பொறுப்புக்காக வரவில்லை, பொறுப்பாக இருக்க வந்துள்ளேன். யார் என்ன வேண்டுமானாலும் கூறலாம். குழப்பத்தை ஏற்படுத்தும் வேலையைப் பார்க்கிறார்கள். நான் எதில் இருந்தும் மடைமாற மாட்டேன் உறுதியாக இருப்பேன்.

அது திமுகவிற்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும். கலைஞரின் இறப்புக்குக் கூட அத்தனை டூவீட் போடவில்லை. என்னைப்பற்றி, சின்ன சின்ன விசயங்களுக்குக் கூட அத்தனை டுவீட் போடுகிறார்கள். இதைப் பார்க்க என்டர்டைன்மெண்டாக இருக்கிறது. பிரதமராக மோடி மீண்டும் வரும் போதுதான் நாடு செழிக்கும். தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டில் இரு கட்சிகளும் இல்லாமல் பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது" என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் தனது 'X' வலைதளப் பக்கத்தில், "அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி - பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்ததை பற்றி பலரும், பலவிதமாகச் சித்தரித்து வருவதால், தன்னிலை விளக்கமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்" என்று கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “1996ஆம் ஆண்டு அன்றைய ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அக்கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய முடிவு செய்ததே என் அரசியல் பயணத்தின் துவக்கம். அரசியல் அனுபவம் அதிகம் இருந்த போதும், அன்று நான் கொடுத்த ஒற்றை எதிர்ப்பு அறிக்கை, திமுகவின் முன்னோடிகளை என் இல்லம் நோக்கி பயணிக்கச் செய்தது.

எந்த ஒரு சுயலாபத்திற்காகவும், சுய நலனுக்காகவும் அல்லாமல், எந்த ஒரு அரசியல் சூழ்ச்சியும் அறியாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அவர்களின் கூட்டணியான தமிழ் மாநில காங்கிரஸையும் ஆதரித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதன் பங்கு என்னையும், என்னைச் சார்ந்த ரசிக பெருமக்களையும், தமிழக மக்களையும் சாரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதன் பிறகு கருணாநிதியால் ஈர்க்கப்பட்டு, அழைக்கப்பட்டு முதன்முறையாக ஓர் அரசியல் கட்சியின் உறுப்பினர் ஆனேன். அரசியல் பாடம், அரசியல் அணுகுமுறை இவை அனைத்தும் கருணாநிதியுடன் பயணித்ததில் கற்றுக் கொண்டேன். அங்கு நடந்த சில கசப்பான சம்பவங்களுக்குப் பிறகு, அக்கட்சியில் இருந்து விலகி, மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்.

அங்கும், திமுகவில் இருந்து விலகக் காரணமாய் இருந்த சிலரைப் போல், அறிவும், ஆற்றலும் இருப்பவரை எப்படி கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று சிந்தித்த சிலர், ஜெயலலிதாவின் கட்சியில் இருந்து நான் விலக காரணமானார்கள். அதன் பிறகு 2007 - ஆகஸ்ட் 31இல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உருவானது. 16 ஆண்டுகள் அரசியல் பயணம்.

பாராளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக, என் சமத்துவ சொந்தங்களுக்கு குடும்பத் தலைவராக மக்கள் சேவையில் என்னை அர்ப்பணித்துக் கொண்டு, பல மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபட்டிருக்கின்றேன்.

எந்த ஒரு பேருதவியும் இல்லாமல், நான் நடித்து ஈட்டிய பொருளாதாரத்தின் அடிப்படையில், நேற்று வரை என் இயக்கத்தை நடத்தி, மக்கள் பணியில் என்னை அர்ப்பணித்திருக்கின்றேன். அப்பழுக்கற்ற பெருந்தலைவர் ஆட்சி, தமிழகத்தில் மீண்டும் அமைய வேண்டும் என செயல்பட்டிருக்கின்றேன்.

ஆனால், ஜனநாயகம் குறைந்து, பணநாயகம் மேலோங்கிய அரசியலில் நாம் நினைத்த இலக்கை அடைய முடியவில்லையே என்ற என் சிந்தனைக்கு, இந்த பாராளுமன்றத் தேர்தல் ஓர் ஞானோதயமாக அமைந்தது என்றே சொல்லலாம். காரணம், தேர்தல் வரும் போதெல்லாம், எந்த கட்சியுடன் கூட்டணி, எத்தனை இடங்கள் தரப்போகிறார்கள் என்ற பேச்சுதான் மேலோங்கி நிற்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

பதவி இருந்தால்தான் மக்கள் பணியாற்ற முடியும் என்பது உண்மை என்றாலும், கூட்டணி, கூட்டணி என்ற பேச்சுகளும், அதற்கு மட்டும்தான் நாம் பயணிக்கிறோமா என்ற எண்ணமும் என் அமைதியை இழக்கச் செய்தது. என் பயணத்தில் நான் தோல்வி அடைந்துவிட்டேன் என்று பிறர் பலவிதமாக பேசினாலும், அதற்கெல்லாம் கவலைப்படாமல், நாம் மக்களுக்காக சேவை செய்ய நல்ல எண்ணத்தோடு செயல்படுகிறோம் என்பதை மனதில் தாங்கி, சக்திவாய்ந்த நாட்டின் வளர்ச்சியையும், நாட்டு மக்களின் நன்மையையும், இந்தியர்களின் பெருமையை உலகறியச் செய்யும் பாரத பிரதமர் மோடியின் திறமையான ஆட்சிக்கு, மீண்டும் அப்பழுக்கற்ற பெருந்தலைவரின் ஆட்சி அமைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியுடன் உறுதுணையாக இருந்து ஏன் செயல்படக்கூடாது என்று சிந்தித்தேன்.

அதன் வாயிலாக, 2026 இல் தமிழகத்தில் கோலோச்சி வரும் இரு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்திட, நம் இலக்கையும், மக்களின் எண்ணங்களையும் இணைத்து பிரதிபலித்திட வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக தோன்றியது.

இந்த சிந்தனை என்னை உந்திக் கொண்டிருந்ததால், மக்கள் பணியில், பதவியில் இருந்தால்தான் நம் இலக்கை அடைய முடியும் என்ற எண்ணத்தை கடந்து, ஒரு மாபெரும் சக்தியாக இந்தியாவை அனைத்து துறைகளிலும் முன்னேற்றிச் செல்கின்ற பாரதிய ஜனதா கட்சியுடனும், பாரத பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டிற்கும், நம் மாநிலத்திற்கும், நம் மொழிக்கும், நம் கலாச்சாரத்திற்கும் பெருமை சேர்த்திட எண்ணி, எனது 28 ஆண்டுகள் அரசியல் அனுபவத்தையும், என் உழைப்பையும், என் இயக்கத்தின் சகோதரர்களின் உழைப்பையும் தமிழக மக்களுக்காகவும், தேசத்தின் ஒற்றுமைக்காகவும், தேசத்தின் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணித்திட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை, பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்து செயல்பட அனைவரின் ஆதரவுடன் முடிவெடுத்தேன்.

என் வளர்ச்சியிலும் இன்ப, துன்பங்களிலும் என்னுடன் பயணித்து, ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கும், சமத்துவ சொந்தங்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கும் நன்றி கூறி, இது என் முடிவல்ல, ஓர் வருங்கால எழுச்சியின் தொடக்கம் என்று அறிவித்து, மக்கள் பணியில் மேலும் என்னை அர்ப்பணித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:“இது மோடி புளுகு”.. பாஜகவை கடுமையாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details