தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாம்சங் தொழிலாளர் பிரச்னையை ஊதி பெரிதாக்குவதா? சிஐடியு.க்கு திமுக தொழிற்சங்கம் கடும் கண்டனம்!

சாம்சங் தொழிலாளர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்வதை விட்டு பிரச்சனைகளை ஊதி பெரிதுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு.க்கு திமுகவின் தொழிற்சங்கமான தொ.மு.ச. பேரவை (தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை) கேட்டுக்கொண்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

தொமுச அறிக்கை, சாம்சங் ஊழியர்கள் போராட்டம் (கோப்புப்படம்
தொமுச அறிக்கை, சாம்சங் ஊழியர்கள் போராட்டம் (கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamilnadu)

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இப்போராட்டம் குறித்து திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை பொதுச் செயலாளரும், எம்.பி.யுான சண்முகம் இன்று விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், 'திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இல்லாதபோதும் இடதுசாரிகளை ஆதரித்த ஓர் இயக்கம். இதற்கு அண்ணாதுரை, கருணாநிதி காலங்தொட்டே பல உதாரணங்களை சொல்லலாம். சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையை மிகவும் பெரிதுபடுத்தி அதனை முடிவுக்குக் கொண்டுவர இயலாத நிலை ஏற்படுவது குறித்து எங்கள் தொ.மு.ச. நிர்வாகிகள் தங்களுடைய வருத்தத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இந்நிலையில் இந்தப் போராட்டம் சம்மந்தமாக நீங்கள் கொடுத்த அறிக்கையின்படி நாங்கள் அறிந்து கொள்வது, சங்கத்தை பதிவு செய்ய தொழிலாளர் துறையில் கொடுத்து இருப்பதாகவும், அது காலதாமதமாகி உள்ளது. அதனால் தாங்கள் நீதிமன்றத்திற்குச் சென்றதாகவும் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கினைத் தொடர்ந்து ஒரு தேக்க நிலையை உருவாக்கி தொழிலாளர் துறை பதிவு எண் வழங்கவில்லை என்று அரசின் மீது குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? அனைத்து அமைச்சர்களும் நீங்கள் கேட்டுக் கொண்டபடி தீர்ப்பு வந்தவுடன் பதிவு எண் வழங்குவதில் எங்களுக்கு

எவ்வித பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். இது சாம்சங்குக்கு மட்டும் புதிதல்ல. State Bank of India-ல் உள்ளவர்கள் தங்கள் சங்கத்தை பதிவு செய்தபோது SBI நிர்வாகம் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கின் இறுதியில் பதிவு எண் வழங்கலாம் என தீர்ப்பு கிடைத்த பின் அச்சங்கத்திற்கு பதிவு எண் வழங்கப்பட்டது என்பதை தாங்கள் அறிவீர்கள்.

இதையும் படிங்க: அதிமுக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட்டுகள் போவார்களா?- முத்தரசன் அளித்த விளக்கம்!

ஒரு சங்கத்தை அங்கீகரிக்க வேண்டுமென்றால் ஒரு சங்கம் பதிவு செய்து ஒரு ஆண்டு காலம் முடிந்தவுடன் அங்கீகாரம் கோரலாம். அப்படி நிர்வாகம் வழங்காவிட்டால் State Implementation of Evaluation கமிட்டிக்கு விண்ணப்பித்து தங்களுடைய உறுப்பினர்களை நிரூபித்து அதன்படி அதிக உறுப்பினர்களை பெற்றிருந்தால் அரசு அச்சங்கத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கலாம். ஆனால், இந்தியாவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி எந்தவொரு சங்கத்தையும் அங்கீகரிப்பதற்கான ஒரு சட்டம் தற்பொழுது இல்லை.அதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டு வருகின்றோம். சட்டம் இல்லாதபோது சட்டப்படி அரசு நடக்கவில்லை என்று நீங்கள் குறை கூறுவதில் என்ன நியாயம் உள்ளது?

இந்தப் பிரச்சினை குறித்து தமிழ்நாட்டு முதலமைச்சர் உங்களுடன் பேச வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஜூலை 7 ஆம் தேதி நான் டெல்லியில் இருந்து புறப்பட்டு வந்து உங்களோடு

பேசி உங்கள் கோரிக்கைகளை தொழிலாளர் நல அமைச்சர் முன்பாக விவரித்து அதன் மீது தீர்வு காண்பதற்கு முயற்சிகள் தொடர்ந்து எடுத்து வருவதை மறந்திருக்கமாட்டீர்கள். அதன் பிறகு தொழிலாளர் துறையில் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் நிர்வாகம் ஒத்துக் கொள்ளவில்லை என்று நீங்கள் எடுத்துக் கூறிய பிறகு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் கூறியது அரசு மேற்கொண்ட முயற்சி தொழிலாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு இல்லையா? அமைச்சர்கள் குழுவிடம் நீங்கள் தொழிற்சங்கப் பதிவு பிரச்சினை நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு அந்த கோரிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டீர்கள்.

ஆனால் உங்கள் கோரிக்கை பட்டியலை தந்து இதன்படி நிர்வாகம் எங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென்று கேட்கப்படவில்லையா? ஆனால் சாம்சங் நிர்வாகம் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் ஊதிய உயர்வு வழங்கி வருகின்றது. அதன்படி 1.4.2025-க்குப் பிறகுதான் புதிய ஊதிய உயர்வு வழங்க முடியும் என்று நிர்வாகம் கூறிவிட்டது. இந்நிலையில் அமைச்சர்கள் சாம்சங் நிர்வாகத்தை நிர்பந்தித்து இடைக்கால நிவாரணமாக ரூ.5000/- மற்றும் நீங்கள் வைத்த கோரிக்கைகள் சிலவற்றையும், வைக்காத சில கோரிக்கைகளையும் நிர்வாகம் ஏற்றுக் கொண்டுவிட்டதாக உங்களிடம் தெரிவித்தது தொழிலாளர் ஆதரவு நிலையில்லையா? இவை அனைத்தையும் மறைத்து புதிய கோணத்தில் அரசை நிர்வாக ஆதரவு நிலை எடுப்பது போல் சித்தரித்து போராட்டத்தை பெரிதுபடுத்தி, இப்போது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் பல சிக்கல்கள் மேலும் மேலும் உருவாகி வருகிறது. இதனால் சகோதர அமைப்புகளாக உள்ளவர்கள் எவ்வாறு நல்ல முடிவு எடுக்க முடியும் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டிலிருந்து வெளியேறுகிறதா சாம்சங்? போராட்டங்களுக்கு அரசு சொல்லும் தீர்வு!

ஒன்றை நாங்கள் நினைவுபடுத்த விரும்புகின்றோம். நாங்களும் சங்கம் அமைத்து ஒசூரிலும் அம்பத்தூரிலும் பல தொழிற்சாலைகளில் போராடி வேலையிழந்து தொழிலாளர்கள் தவிப்பதும், அதற்கு தீர்வுகாண நடவடிக்கை கள் மேற்கொள்ள இயலாமல் இருப்பதையும் அனைவரும் அறிவார்கள். பல நிர்வாகங்கள் பெரும்பான்மை தொழிலாளர்களை ஏற்றுக் கொள்ளாமல் ஒரு குறிப்பிட்ட தொழிலாளர்களை வைத்து ஒப்பந்தம் போட்டிருப்பது தமிழ் நாட்டிற்கு ஒன்றும் புதியது அல்ல. சாம்சங்கில் மட்டும் நடப்பதாக சித்தரித்து பெரிதுபடுத்துவது சரியல்ல.

தமிழக முதலமைச்சர் எல்லா முயற்சிகளும் மேற்கொண்டு வரும் சூழலில் அவரை தரம்தாழ்ந்து பேசுவதும், அவரை விமர்சிப்பதும் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சரியாக இருக்குமா என்பதை நீங்கள் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு பிரச்சினையில் இளைஞர்கள், தொழிற்சங்கம் அனுபவம் இல்லாதவர்கள் உணர்ச்சி வசப்பட்டு போராட்டத்தில் இறங்கி விடுவது என்பது ஒன்றும் புதியது அல்ல. ஆனால் அனுபவம்மிக்க தொழிற்சங்கத் தலைவர்கள் அவர்களிடம் இதனை எடுத்துக்கூறி இந்தப் போராட்டத்தை தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

அரசு எல்லா நிலைகளிலும் தங்களுடைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு உறுதுணையாக தொ.மு.ச. பேரவையும் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தாங்கள் பிரச்சினையை மேலும் பெரிதுபடுத்தாமல் ஓர் முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details