சென்னை:சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 28 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் செம்பியம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர்பில் இருந்த நபர்களையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில், சென்னை ராஜரத்தினம் மைதானம் பகுதியில் உள்ள ரவுடிகள் ஒழிப்பு காவல்துறை பிரிவு அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வழக்கறிஞரும், விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகருமான பன்னீர்செல்வத்திடம் நேற்று இரவு தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்குப் பிறகு வழக்கறிஞர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி போலீசார் அழைத்தனர். சம்மன் வழங்கியுள்ளனர். விசாரணைக்கு நேற்று நேரில் வந்த போது, அவர்கள் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் கூறினேன். அதனை போலீசார் பதிவு செய்து கொண்டனர்.