சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காகப் பெண் பாதுகாவலர்கள் அடங்கிய பிங்க் ஸ்குவாட் (PINK SQUAD) என்னும் புதிய திட்டத்தைச் சென்னை, நந்தனத்தில் உள்ள மெட்ரோ தலைமையகத்தில் சென்னை மெட்ரோ நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சித்திக் தொடங்கி வைத்தார். இதில் தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்ற 23 பேர் அடங்கிய மகளிர் பாதுகாவலர்கள் குழுவானது மெட்ரோ ரயில்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பணியில் ஈடுபட உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சித்திக் கூறுகையில், "சென்னை மெட்ரோ ரயிலில் தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பெண்களின் பாதுகாப்புக்காக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி உள்ளது.
பெண்களின் பாதுகாப்புக்காக, தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்ற 23 மகளிர் பாதுகாவலர்கள் கொண்ட பிங்க் ஸ்குவாட் அமைக்கப்பட்டுள்ளது. ரோந்து பணிகளிலும், கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள ரயில் நிலையங்களிலும் மகளிர் பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். பெண்களுக்கு எதிராகக் கூட்டத்தில் நடைபெற வாய்ப்புள்ள குற்றங்களைத் தடுக்க இந்த நடவடிக்கை பெரிதும் உதவும்.
மெட்ரோ ரயிலில் மகளிருக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் 1860 425 1515 என்கிற சி.எம்.ஆர்.எல். உதவி எண்ணுக்குத் தொடர்பு கொண்டால், அவர்கள் மூலம் மகளிர் பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு பயணிகளுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.