திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே உள்ள சத்திரம் குடியிருப்பு பகுதியில் இருபாலர் படிக்கும் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், மாணவர்களுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, பள்ளியின் ஆய்வகங்களும் வகுப்பறைகளாக செயல்படுவதாகத் தெரிகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்பறையாக செயல்பட்ட ஆய்வகத்தை மாணவிகள் பூட்டியபோது, அங்கிருந்த ஆசிட் பாட்டில் உடைந்து, மாணவி ஒருவரின் கண்ணில் பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சக மாணவிகள் இது குறித்து ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்து, அந்த மாணவியை திருநெல்வேலியில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், கண்பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து, தனியார் மருத்துவமனையில் அந்த மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது அவர் நலமாக இருக்கிறார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை பாலமுருகன் அளித்த புகாரின் அடிப்படையில், தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாணவியின் பெற்றோர் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாத சங்கத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், “பள்ளியில் ஆய்வகத்தில் வைத்து வகுப்பு நடத்தப்பட்டதன் காரணமாகவே இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இது, பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவும், மெத்தனமான போக்குமே இந்த பிரச்னைக்கு காரணம்” என குறிப்பிட்டுள்ளனர்.