தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி பண்டிகை: சொந்த ஊர் செல்வோருக்கு அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!

தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் பேருந்துகளும் வாடகைக்கு எடுத்து இயக்கப்படும் எனவும், சிஐடியு-க்கு பொதுமக்களின் பிரச்னைகள் பற்றி தெரியாது என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறி உள்ளார்.

பேருந்துகள் கோப்புப்படம், அமைச்சர் சிவசங்கரன்
பேருந்துகள் கோப்புப்படம், அமைச்சர் சிவசங்கரன் (Credits - ETV Bharat Tamil Nadu, minister Sivasankar SS X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 10 hours ago

சென்னை :தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்பட வேண்டிய சிறப்புப் பேருந்துகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தீபாவளி பண்டிகையை யொட்டி வரும் அக் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களில் சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து மொத்தமாக 14 ஆயிரத்து 16 பேருந்துகள் இயக்கப்படும்.

தீபாவளி பண்டிகை நிறைவடைந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக 12 ஆயிரத்து 606 பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

பேருந்து முன்பதிவு :நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app, www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாக முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து, செங்கல்பட்டு அல்லது வண்டலூர் சாலையை பயன்படுத்த வேண்டும். கடந்த ஆண்டுகளை போலவே நடப்பு ஆண்டிலும் போதுமான பேருந்துகள் இயக்கப்படும்.

புகார் எண்கள் : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இயக்கம் குறித்து அறிந்துக் கொள்ளவும், புகார் தெரிவிக்கவும் 94450 14436 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தெரிவிக்ககலாம்.

மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், 044-24749002, 044- 26280445, 044 26281611 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். கடந்தாண்டை போல தனியார் பேருந்து நிறுவனத்தினருடன் வரும் 24ம் தேதி கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிக்கப்படும்.

பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய 2 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும்
இயக்கப்படும். பொதுமக்கள் வசதிக்காக உதவி மையம் அமைக்கப்படுகிறது. போதுமான பேருந்துகளை இயக்க உள்ளோம்.

தனியார் பேருந்துகள் : தனியார் பேருந்துகளை வாடைக்கு அமர்த்தியும் இயக்க உள்ளோம். தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதற்கு வெளிப்படையான டெண்டர் விடப்பட்டு, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.51.25 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அரசுப் பேருந்தில் செல்லும்போது கொடுக்கும் கட்டணத்தை கொடுத்து செல்வதால் பொது மக்களுக்கு எந்த சிரமமும் இருக்காது. தனியார் பேருந்துகள் அவரவர் டிரைவரை வைத்து இயக்குவார்கள். ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் தனியார் பேருந்துகளின் ஸ்பேர்பஸ் எடுத்து இயக்கப்படும். ஏற்கனவே ஒட்டிக்கொண்டிருக்கும் ஓட்டுநர் இயக்குவதால் எந்த பிரச்னையும் கிடையாது. அரசு ஏற்பாடு என ஒரு ஸ்டிக்கர் மட்டும் ஒட்டப்படும்.

இதையும் படிங்க :தீபாவளியை முன்னிட்டு 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சிஐடியு : சிஐடியு பொருத்தவரையில், பொதுமக்களின் பிரச்னை எதுவும் அவர்களுக்கு தெரியாது. குறிப்பாக, சிஐடியுக்கு என்ன பிரச்னையோ அதை மட்டும் தான் அவர்கள் முன்னிறுத்துவார்கள். ஏற்கனவே மற்ற போக்குவரத்துக் கழகங்களில் இருக்கும் பேருந்துகளை சென்னை கொண்டு வந்து கூடுதலாக இயக்குவோம்.

அப்படி கொண்டு வரும் பேருந்துகள் காலியாக எடுத்துவர வேண்டி இருக்கும். அதற்கான செலவுகள் குறைகிறது. மற்ற இடங்களில் கூட்டம் குறைவாக இருக்கும் போது அங்கிருந்து பேருந்துகளை எடுப்போம். அப்போது 90 ரூபாய் வரையிலும் கூட செலவாகும்.

ஆனால் நாம் 51 ரூபாய் 25 பைசாவிற்கு எடுக்க உள்ளோம். பொதுமக்களின் நன்மை கருதி எடுக்கப்பட்ட முடிவு. 7,200 பேருந்துகள் புதியதாக வாங்குவதற்கு முதலமைச்சர் நிதி வழங்கி புதிய பேருந்துகள் வந்து கொண்டிருக்கிறது.

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் நேற்று கூட 80 பேருந்துகள் புதியதாக வாங்கப்பட்டுள்ளது. தனியார் மயமாக்க வேண்டும் என்றால் ஏன் புதிய பேருந்துகளை வாங்கி செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நாடாளுன்றத் தேர்தலுக்கு முன்னர் ஓட்டுநர், நடத்துநர் எடுத்தோம்.

மற்றப் போக்குவரத்துக் கழகத்திற்கும் ஓட்டுநர், நடத்துநர் எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. தனியார் மயமாக்கினால் ஏன் ஆள் எடுக்கப் போகிறோம். அரசியல் காரணத்திற்காக கூறலாம். அவர்களின் பார்வை வேறு, அரசின் பார்வை வேறு.

பொது மக்களுக்கான நன்மை கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் தேவைக்கேற்ப இயக்கப்படும். இயக்கப்படும் பேருந்துகளுக்கு வாடகை கொடுக்கப்படும். சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுப்பதற்கு தனியாக வழி ஏற்படுத்தி தரப்படும்" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details