கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன், எம்.பி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் வழிகாட்டுதல் கொடுத்து இருக்கின்றனர். கோயம்புத்தூரில்
இரு தினங்களில் பெய்த மழை காரணமாக, மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாத வகையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பெரிய அளவில் மழை பெய்தாலும் ஒரு சில மணி நேரங்களில் மழைநீர் அகற்றப்பட்டு இயல்பு நிலைக்கு, பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மழையை எதிர்கொள்ளும் வகையில் கடந்த மே மாதம் முதலே தேவையான பணிகளை செய்து வருகின்றோம்.
கோயம்புத்தூரில் மழைநீர் தேங்கும் இடங்கள் என 6 இடங்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றது. அந்த இடங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. சுரங்கப் பாதைகளில் மழைநீர் பாதிப்பு இருக்கும் இடங்களில் எந்த வாகனம் செல்ல முடியும் என்பதை தெரிவிக்கும் விதமாக கலர் மார்க் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே மின்சாரத் துறை பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. சென்னை, கோவை உட்பட அனைத்து இடங்களிலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இருக்காது. உயிரிழப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. இதுவரை மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை. சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றது.