தமிழ்நாடு

tamil nadu

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான சூமோட்டோ வழக்கு; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரி கேள்வி..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 6:49 PM IST

Minister I.Periyasamy: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான சூமோட்டோ வழக்கில், நீதிமன்றம் சென்றால் நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை மட்டும் உள்ளது. அந்த நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றத்துக்கு உள்ளது என தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

mhc-ordered-that-verdict-in-suo-moto-case-against-minister-periyasamy-has-been-adjourned
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான சூமோட்டோ வழக்கு; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரி கேள்வி!

சென்னை: கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கி முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் போதிய ஆதாரங்கள் இல்லை என தெரிவித்து வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு கடந்த 3 மாதங்களாக நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அமைச்சர்கள் மீதான வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளித்தால் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தொடர்ந்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின் படி பிப்.7 ஆம் தேதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தொடர்ந்து விசாரணை செய்யத் தலைமை நீதிபதி அனுமதி அளித்ததையடுத்து, அமைச்சர் பெரியசாமி மீதான வழக்கின் இறுதி விசாரணை (பிப்.12) தொடங்கியது.

அப்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில், "முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் அமைச்சர்களை நியமிக்க ஆளுநர் ஒப்புதல் வழங்குகின்றார். அதனால், அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த அனுமதி வழங்க ஆளுநருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. சபாநாயகருக்கு இல்லை. அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாகவே அனுமதி வழங்கியுள்ளார். அதனால், சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது சரிதான்" என வாதம் செய்தார்.

இந்த வழக்கு இன்று (பிப்.13) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அமைச்சர்கள் மீதான வழக்கை விசாரிக்க யார் அனுமதி தர வேண்டும். ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? சபாநாயகருக்கு உள்ளதா? என விளக்கமளிக்க அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தினார். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை இடையில் விடுதலை செய்ய நடுவர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.

முழுமையான விசாரணைகள் முடிந்த பின்னரே, ஆவணங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை வழக்கிலிருந்து விடுவிக்க உரிமை உள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து ட்ரையல் நடத்தாமல் இடையில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது.

வழக்கின் இடையில் குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றம் விடுதலை செய்வது, சிறப்பு நீதிமன்றம் கொண்டு வரப்பட்டதற்கான நோக்கத்தையே சொல்லாததாக மாற்றிவிடும் என உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெரிவித்துள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை போதுமான ஆவணங்களை சமர்ப்பித்து தனது விசாரணையைச் சரியாகச் செய்துள்ளது என அரசு விளக்கமளித்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்றுக் கொண்டதா? இல்லையென்றால் ஏன் ஆளுநரின் அனுமதி பெற முயற்சி செய்யவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை ஆவணங்களைச் சரியாக வைத்திருந்தால் ஏன் ஆளுநரிடம் அனுமதி பெற முயற்சி செய்யவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை வேண்டுமென்றே இந்த வழக்கில் செயல்படவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை சரியாகச் செயல்படவில்லை என்ற காரணங்களுக்காகத் தான் வழக்கை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. ஆளுநரின் அனுமதி இல்லாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகச் சிறப்பு நீதிமன்றம் கருதினால், ஆளுநரின் அனுமதி பெற லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருக்கலாம். வழக்கைத் தொடர்ந்து நடத்த வேண்டிய லஞ்ச ஒழிப்புத்துறை, கண்மூடி வேடிக்கை பார்ப்பதை எப்படி ஏற்க முடியாது.

ஆவணங்களின் அடிப்படையில் குற்ற முகாந்திரம் இருந்தால், எப்படி வழக்கை ரத்து செய்ததும் எதிர்ப்பு தெரிவிக்காமல் லஞ்ச ஒழிப்புத்துறை இருந்தது. எங்கே நீதி மீறப்படுகிறதோ? அங்கே நீதியைச் சரிப்படுத்த வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. தொடர்ந்து இப்படியே நீதி மீறப்படுவதை அனுமதிக்க முடியாது. யாராவது ஒருவர் அதைச் சரிப்படுத்தியே ஆக வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை ஆளுநரிடம் அனுமதி வழங்கக் கூடாது என யாரும் தடை விதிக்கவில்லை.

ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. எதிர்காலத்திலாவது இந்த நிலைமை மாறும் என்பதற்காக இந்த கேள்விகளை எழுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வரச் சரியான நீதி வழங்கப்பட வேண்டும். சாதாரண மனிதனுக்குச் சட்டத்தில் என்ன இருக்கிறது என்பது விளக்கமாகத் தெரியாது.

ஆனால், நீதிமன்றம் சென்றால் நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை மட்டும் உள்ளது. அந்த நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றத்துக்கு உள்ளது எனத் தெரிவித்து வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:கனிமவள நிறுவனங்களிடம் ராயல்டி வரி வசூலிக்கத் தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு என்ன?

ABOUT THE AUTHOR

...view details