தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொலை வழக்குகளில் போலியான நபர்கள் சரண் அடைவதைத் தடுக்க நெறிமுறைகள் வகுக்கப்படும் - சென்னை உயர் நீதிமன்றம் - Kattankulathur

Murder Cases Surrender Issue: கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்குப் பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவதைத் தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Murder Cases Surrender Issue
Murder Cases Surrender Issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 9:26 PM IST

சென்னை:சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராகச் செயல்பட்டு வருபவர் ஆராமுதன். இவர், வண்டலூர் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் கட்சி அலுவலகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த மாதம் வண்டலூர் மேம்பாலம் அருகே புதிதாகப் பேருந்து நிலையம் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய பேருந்து நிலையத்தைப் பார்வையிடுவதற்காகத் தனது காரில் ஆராமுதன் வந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை காரின் மீது தூக்கி வீசி உள்ளனர். இதில், காரின் முன் பக்கம் கண்ணாடி முழுவதுமாக உடைந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த ஆராமுதன் காரில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, அந்த மர்ம நபர்கள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதன் தொடர்ச்சியாக, இந்த கொலை வழக்கில் காஞ்சிபுரம், திருப்பூரைச் சேர்ந்த 5 பேர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தான் சரணடைய வேண்டும் என்றும் வேறொரு நீதிமன்றத்தில் சரணடைய முடியாது என்றும் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவத்தில் சத்தியமங்கலம் மாஜிஸ்திட்ரேட், சரண்டரை ஏற்றிருக்கக் கூடாது என்றும், ஊக்குவித்திருக்கக் கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதுமட்டும் அல்லாது, இதுபோல் சரணடைவதால் வழக்கு விசாரணை பாதிக்கும், உண்மையான குற்றவாளிகள் சரணடையாமல் போலியான நபர்களைச் சரணடைய வைப்பார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், சத்தியமங்கலம் நீதிமன்றம் சரண்டர் ஏற்றுக்கொண்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவையும் தாக்கல் செய்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், "கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்குப் பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவதைத் தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகள் உத்தரவாகப் பிறப்பிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:மூன்றாம் பாலினத்தவர் எத்தனை பேர் - புள்ளி விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details