மதுரை:தூத்துக்குடி நாட்டுப்படகு ஏரல் மீன்பிடி தொழிலாளி நலச்சங்க செயலாளர் ஜான்சன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை 350 கி.மீ கடல் பரப்பில், 10 ஆயிரத்து 500 சதுர கி.மீ பரப்பளவை மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிர்கோள காப்பகமாக, மத்திய அரசு கடந்த 1989-ஆம் ஆண்டு அறிவித்தது. இப்பகுதியில் 4 ஆயிரத்து 223 கடல் வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதில் அழிந்து வரும் இனமான கடல் பசு, 14 வகை கடல் புற்களும் அடங்கும்.
வான் தீவு, காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, விலங்கு சல்லி தீவு, முயல் தீவு உள்ளிட்ட 21 தீவுகளை உள்ளடக்கிய இந்த பகுதியை, பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா கடல் வாழ் தேசிய பூங்காவாக தமிழக அரசு அறிவித்தது. இந்தச் சூழலில், தூத்துக்குடி மாவட்ட கடற்கரையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், ஆழ்கடலில் மூழ்கி பாரம்பரிய சங்கு எடுத்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீன் வளத்துறையும் சங்கு எடுக்க லைசென்ஸ் வழங்கி வருகிறது.