தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ETV Bharat / state

'ஹெலிகாப்டர் சகோதரர்கள்' மோசடி விவகாரம்; பறிமுதல் சொத்துக்களை வழக்கில் இணைக்க உத்தரவு! - helicopter brothers fraud case

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் சொத்துகளை வழக்கில் இணைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: துபாயைச் சேர்ந்த முகம்மது யூசுப் சவுகத் அலி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "நாங்கள் கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். தற்போது, துபாயில் குடியுரிமை பெற்று வசித்து வரும் இந்தியர்கள். கடந்த 2020ஆம் ஆண்டு எனது மனைவி, மகள், மருமகன் ஆகியோர் இந்தியாவிற்கு வந்தனர். அப்போது கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்தச் சூழலில் கும்பகோணத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள், ஹெலிகாப்டர் சகோதரர்களான கணேசன், சுவாமிநாதன், அவரது நண்பர்கள் ரகு ஆகியோர் தாங்கள் வெளிநாடுகளில் ஹெலிகாப்டர் சேவையை வழங்கி வருவதாகவும், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ரிசர்வ் வங்கியின் அனுமதி உடன் நிதி நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் எனது மனைவியிடம் கூறியுள்ளனர்.

அதோடு, அவர்களது நிறுவனத்தில் நிதியை முதலீடு செய்தால் இரு மடங்காக திருப்பிப் பெறலாம் எனவும் உறுதி அளித்துள்ளனர். இதனை நம்பி எனது மனைவி ரூ.10 கோடி முதலீடு செய்துள்ளார். இது தொடர்பாக நான் அறிந்து, அவர்களிடம் பணத்தை திரும்பக் கேட்டபோது, என் மனைவியிடம் இருந்து வாங்கிய பணத்தை வெவ்வேறு வழிகளில் முதலீடு செய்து விட்டதாகவும், பணத்தை திரும்பப் பெற கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டு, மேலும் ரூ.1 கோடியை எங்களிடம் இருந்து பெற்றனர்.

அதற்கு பதிலாக அவர்கள் எங்களுக்கு அளித்த காசோலையை வங்கியில் செலுத்திய போது அவர்கள் எங்களை ஏமாற்றியது தெரியவந்தது. இது தொடர்பாக தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னரே இதுபோல பல நபர்களை அவர்கள் ஏமாற்றியது தெரியவந்தது. சகோதரார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் போலீசார் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

இதையும் படிங்க:பழனி பஞ்சாமிர்தம் விவகாரம்: உறுதிப்படுத்தப்படாத கருத்துகளை 'X' தளத்தில் பதிவிடுவதை தவிர்க்கவும் என நீதிபதி அறிவுரை!

தவறு செய்தவர்கள் மேலும் பல நபர்களை ஏமாற்றி வருகின்றனர். ஆகவே, தமிழ்நாடு வைப்புத் தொகையாளர்களின் வட்டி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உரிய அலுவலரை நியமித்து நிதி மோசடி செய்தவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து அச்சட்டத்தின் கீழ் இணைத்து, அவர்களிடம் உள்ள பணத்தை பறிமுதல் செய்து முதலீட்டாளர்களுக்கு திருப்பி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட நபர்கள் நிதி நிறுவனம் நடத்தி ரூ.500 கோடிக்குமேல் பொதுமக்களிடம் மோசடி செய்து உள்ளார்கள். இதுகுறித்து திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். சில சொத்துக்களையும் பறிமுதல் செய்துள்ளார்கள்.

ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை இதுவரை இந்த வழக்கில் இணைக்கவில்லை. எனவே ,தமிழக அரசு மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கில் இணைக்கும் நடவடிக்கையை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என வாதிட்டார்.

இதனை பதிவு செய்த நீதிபதி, “2023 ஆம் ஆண்டு சொத்துக்களை பறிமுதல் செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த சொத்துக்களை இந்த வழக்கில் இணைப்பதற்கு அரசுக்கு குறிபானை அனுப்பி உள்ளனர். ஆனால், இதுவரை சொத்துக்களை வழக்கில் இணைப்பதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள, பணம் ஆகியவற்றை வழக்கில் இணைக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் இரண்டு மாதங்களில் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணை முடித்து வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details