சென்னை:ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஏழாவது ஊதியக் குழுவின் நிலுவைத்தொகை நாளை(18.9.2024)க்குள் வழங்கப்படவில்லை எனில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்ககளின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் உயர்கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயற்குழுக் கூட்டம் 13.9.2024 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தங்களின் உடனடி நடவடிக்கைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட 22 பேராசிரியர்களின் நியமனம் குறித்து உயர்நீதிமன்ற ஆணையின்படி விசாரணைக்குழு அமைக்கபட வேண்டும். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய பேராசிரியர்கள் முடிவெடுக்கும் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் இந்த விசாரணை முடியும் வரையில் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஏழாவது ஊதியக்குழுவின் நிலுவைத் தொகை வருகின்ற 18.9.2024க்குள் வழங்கப்படவில்லை எனில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும்.
ஏற்கனவே பதவி உயர்வு (CAS) பெற்ற ஆசிரியர்களுக்கு உரிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும்போது (CAS) நிதிக்குழுவின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற ஒரு புதிய நடைமுறையைப் புகுத்தி பதவி உயர்வுகளை வழங்கு வழங்குவதில் தேவையற்ற காலதாமதத்தை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்நடவடிக்கையை கைவிட்டு ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி பதவி உயர்வுகளை வழங்க நிர்வாகம் உடனடியாக நவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.