சென்னை: மருத்துவ மேற்படிப்பில் சேரும் மாணவர்கள், படிப்பு முடிந்த பின் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக பணியாற்றுவதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதன்படி, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்களாகப் பணியாற்றும் பிரியங்கா, பரத்ஜி பாபு, அம்பிகா ஆகியோர், கரோனா காலத்தில் தாங்கள் ஆற்றிய பணியையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, தங்களை விடுவிக்கக் கோரியும், சான்றிதழ்களை திரும்பத்தரக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது, கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் பரிசீலித்துள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், கரோனா காலம் என்பது அவசர காலம் என்பதால், மருத்துவ மேற்படிப்பு படித்துக் கொண்டிருப்பவர்களும் கரோனாவில் பணியாற்ற வேண்டும் எனவும், இவர்களுக்கு சலுகை வழங்குவதாக அரசு தெரிவிக்கவில்லை எனவும் அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.