சென்னை:தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் சுருக்கெழுத்தோர், தட்டச்சர், உதவியாளர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளியானது. அந்த செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணையைத் தொடங்கியது.
இந்த நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர் ஶ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையில், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்குக் கூடுதல் உறுப்பினர் நியமிப்பது, உத்தரவுகளை அமல்படுத்துவதற்கான நடைமுறை இல்லாதது, சுருக்கெழுத்தர்கள் காலியிடங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது" குறித்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், சுட்டிக்காட்டப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து அரசின் கருத்தைப் பெற்று மனுத் தாக்கல் செய்வதாக, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்குக் கூடுதல் உறுப்பினர் நியமிக்கக் கோரி, ஆணையத்தின் தலைவர் கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், 22 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அதிருப்தியைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:அரக்கோணம் சிறுமி பாலியல் வழக்கு: 2 இளைஞர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை!
நிதி நெருக்கடி காரணமாக கூடுதல் உறுப்பினர் நியமிக்கக் கோரிய கோரிக்கையைப் பரிசீலிக்க முடியாது என ஆணையத் தலைவருக்கு, அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பதில் அனுப்பியுள்ளதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், இது அரசின் அக்கறையின்மையைக் காட்டுகிறது எனக் கூறி, இந்த சம்பவம் தொடர்பாக பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையைப் பிப்ரவரி 20ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.