சென்னை : வேலூரைச் சேர்ந்த சிந்துஜா - சரவணகுமார் ஆகிய இருவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் கணவர் மீது சிந்துஜா வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில், சிந்துஜாவிடமிருந்து 75 சவரன் தங்க நகை, 11 வெள்ளிப் பொருட்கள், 5 லட்சம் ரூபாய் வரதட்சனை பணம் மற்றும் கார் வாங்க 5 லட்சம் ரூபாய் பெற்றதாக சரவணகுமார் காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து கணவரிடமிருந்து பொருட்களை மீட்டுத்தரக்கோரி வேலூர் உரிமையியல் நீதிமன்றத்தில் சிந்துஜா வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை உரிமையியல் நீதிமன்றம் விசாரித்து நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சிந்துஜா மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவ்வழக்கில், என் கணவர் ஜீவனாம்சமாக 5 லட்சம் ரூபாயை 2 வாரத்தில் தருவதாக கடந்த வழக்கு விசாணையில் உறுதியளித்தபடி அளிக்கவில்லை. எனவே, இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கிடையில் சரவணகுமார் மனைவி தன்னை கொடுமைப்படுத்துவதாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதை ஏற்றுகொண்ட நீதிமன்றம் மனைவிக்கு ஏதும் தர தேவையில்லை என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சிந்துஜா தரப்பில் குடும்ப நல நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கவும், வழக்கு செலவாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கவும், சமரச தீர்வு மையத்தை அனுகி சுமூகமாக பேசி தீர்க்கவும் உத்தரவிட்டது.