சென்னை:கடந்த 1998ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ணா ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வழக்கில், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் 2019ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி தீர்ப்பளித்தது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், பாலகிருஷ்ணா ரெட்டி தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.