தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விக்கிரவாண்டி எல்கேஜி மாணவி மரண வழக்கு: இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு! - VIKRAVANDI CHILD DEATH CASE

விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதி அறிக்கையை 12 வாரங்களில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2025, 5:06 PM IST

சென்னை:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைக்குச் சென்ற எல்கேஜி மாணவி கழிப்பிட தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். கடந்த ஜனவரி 3 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை பழனிவேல் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர் உள்ளிட்டோருக்கு எதிராக விக்கிரவாண்டி காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி பலியான சிறுமியின் தந்தை பழனிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்துப் பெற்றோருக்கு முறையாகப் பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை. பள்ளியிலிருந்து 20 மீட்டர் தொலைவில் காவல் நிலையம் இருந்தும், குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை. குழந்தை கழிவு நீர்த் தொட்டியில் விழுந்தது தொடர்பாக எந்த ஆதாரங்களும் இல்லை. குழந்தையின் ஆடையில் ரத்தக்கறை உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த மனுவில், “பள்ளி நிர்வாகம், கண்காணிப்பு கேமரா காட்சிகளை அழிக்க வாய்ப்புள்ளது. சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பள்ளி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. குழந்தையின் உடையில் ரத்தக்கறை குறித்து போலீசாரிடம் தெரிவித்த போது, உடையைத் திருப்பி தரும்படியும், இல்லாவிட்டால் வழக்கை முடித்து வைத்து விடுவதாக விக்கிரவாண்டி போலீசார் மிரட்டியதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனால் குழந்தை மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. விசாரணையை மாற்ற வேண்டும். கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பெறும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:போதை பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், சம்பவம் தொடர்பாக டி.எஸ்.பி. தலைமையில் புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும், 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதனையடுத்து, வழக்கின் புலன் விசாரணையை விரைந்து முடித்து, 12 வாரங்களில் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், சிசிடிவி காட்சிகளை மாணவியின் தந்தையிடம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற மறுப்பு தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details