சென்னை: 2020 நவம்பர் மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து தற்காலிக ஊழியர்களையும் பணியில் இருந்து நீக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை மாற்றக்கோரி தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் கடந்த 1997ம் ஆண்டு கணிப்பொறி உதவியாளராக தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்ட சத்யா என்பவர், பணி வரன்முறை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதையும் படிங்க:2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெல்லும் - பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேச்சு!
இந்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நேற்று (பிப் 25) விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், 2020 நவம்பர் மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து தற்காலிக ஊழியர்கள் அனைவரையும் பணியில் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், தற்காலிக பணியாளர்களை நீக்கம் செய்தது தொடர்பாக மார்ச் 17ம் தேதி அறிக்கை தாக்கல் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க வேண்டும் என தமிழ்நாட்டு அரசு நீதிமன்றத்தை நாடியது.
இந்நிலையில், உத்தரவை மாற்றியமைப்பது தொடர்பாக அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கு இன்று (பிப். 26) மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, தற்காலிக பணியாளர்களை நீக்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது என தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு வேண்டுமானால் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் எனவும் உத்தரவிட்டனர்.