தமிழ்நாடு

tamil nadu

'அண்ணாமலை என்ற வேதாளம் எங்களை விட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்! - MINISTER JAYAKUMAR

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 2:30 PM IST

MINISTER JAYAKUMAR: டிடிவி தினகரன் இல்லையென்றால் ஓபிஎஸ் கிடையாது எனவும் அண்ணாமலை என்கின்ற வேதாளம் தற்போது எங்களை விட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலை
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலை (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள அழகு முத்துகோனின் திருவுருவச்சிலை மற்றும் அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிகழ்வில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, ஜெயகுமார் மற்றும் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகேன் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில், "ஓபிஎஸ்-ஐ கட்சித் தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு துரோகத்தை செய்துள்ளார்.

ஓபிஎஸ் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அறிமுகப்படுத்தப்படவில்லை. டிடிவி இல்லையென்றால் ஓபிஎஸ் கிடையாது. பொறுப்பு கொடுத்த கட்சி அலுவலகத்தையே சென்று இடித்து உடைத்திருக்கிறார். நாங்கள் எல்லாம் அதனை கோயிலாக நினைக்கிறோம். கட்சிக்கு எந்த ஒரு விசுவாசமும் அவரிடம் கிடையாது" என்றார்.

அதனை தொடர்ந்து சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளித்தவர்,"கட்சியில் இல்லாத ஒருவர் எப்படி கட்சியை இணைக்க முடியும். அது முழு சோற்றில் பூசணிக்காயை மறைப்பதற்கு சமம். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி இணைந்ததைதான் 90 சதவீதம் இணைப்பு என்று அவர்கள் கூறுகிறார்கள். அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை.

தமிழகத்தில் ஒரு மாதத்தில் நூற்றுக்கணக்கான கொலைகள் நடைபெற்று வருகிறது. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்படுகிறார்.முழுமையான விவரம் வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை தேவை. தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளை மாற்றினால் பிரச்சனை இல்லை. முதலமைச்சர் மு.க ஸ்டாலினை மாற்றினால் தான் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கும்.

விக்கிரவாண்டி தேர்தல் நடைபெறும் இடத்திலேயே, கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு இருக்கிறதா என ஒரு சந்தேகம் எழுகிறது. மக்களை பாதுகாக்கக்கூடிய கட்டமைப்பில் அரசு தோல்வி அடைந்துள்ளது. அண்ணாமலை என்கின்ற வேதாளம் தற்போது எங்களை விட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது" என்று ஜெயகுமார் கூறியுள்ளார்.

மேலும், லுங்கி அணிந்து கொண்டு பேட்டி அளிப்பதாக அண்ணாமலை கூறியதற்கு, "லுங்கி அணிந்து கொண்டு பேட்டி அளிப்பது ஒன்னும் அவ்வளவு அவமரியாதை செயல் அல்ல. இன்று சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் லுங்கி அணிகிறார்கள், இஸ்லாமியர்கள் லுங்கி அணிகிறார்கள், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் இன்று லுங்கி அணிகிறார்கள். எனவே அது அவமரியாதைக்குரிய செயல் அல்ல, நான் பெரும்பாலும் வேட்டி அணிந்து தான் தான் பேட்டி கொடுப்பேன்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: விக்கிரவாண்டியில் பதிவான அதிமுக வாக்குகள் யாருக்கு போயிருக்கு? - ஓபிஎஸ் பதில் என்ன? - o panneerselvam

ABOUT THE AUTHOR

...view details