தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'FSSAI-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ரசாயனத்தையே பயன்படுத்துகிறோம்' - தூத்துக்குடி விவகாரத்தில் கேஎஃப்சி விளக்கம்! - THOOTHUKUDI KFC CHICKEN ISSUE

THOOTHUKUDI KFC CHICKEN ISSUE : 'FSSAI-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ரசாயனத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்' என தூத்துக்குடியில் பழைய உணவு எண்ணெய்யை தூய்மைப்படுத்த தடை செய்யப்பட்ட ரசாயனத்தை சேர்ப்பதாக எழுந்த சர்ச்சைக்கு கே.எப்.சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 8:12 PM IST

பறிமுதல் செய்யப்பட்ட சிக்கன்
பறிமுதல் செய்யப்பட்ட சிக்கன் (CREDIT -ETV Bharat Tamil Nadu)

சென்னை:தூத்துக்குடி வேலவன் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வந்த பிரபல கே.எப்.சி உணவகத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் பல அதிர்ச்சிக்குள்ளான செய்திகள் வெளிவந்தன. அந்த ஆய்வில், உணவு எண்ணெய்க்கு பயன்படுத்த அனுமதி இல்லாத மெக்னீசியம் சிலிகேட்-சிந்தடிக் (Magnesium silicate - synthetic) என்ற உணவு ரசாயனத்தை சேர்த்துள்ளதாகவும், பழைய உணவு எண்ணெய்யை தூய்மைப்படுத்துவதற்கு அதனை பயன்படுத்துவதும் தெரியவந்தது.

எனவே, அந்த உணவகத்திலிருந்து 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் - சிந்தடிக் மற்றும் பயன்படுத்தி தூய்மைப்படுத்தப்பட்ட 45 லிட்டர் பழைய உணவு எண்ணெய் ஆகியவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவகத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர்.

இந்நிலையில், சமைக்கும் போது சிறந்த நடைமுறையையும் சர்வதேச தரத்தையும் பின்பற்ற KFC இந்தியா நிறுவனம் உறுதிபூண்டுள்ளது என இச்சம்பவம் சர்ச்சைக்குள்ளான நிலையில் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், “சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் சிக்கன் அங்கீகரிக்கப்பட்ட சப்ளையர்களிடம் இருந்து பெறப்படுகிறது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மற்றும் உணவு பாதுகாப்புக்கு தொடர்புடைய அதிகாரிகளால் வகுக்கப்பட்ட அனைத்து தரநிலைகளும் பின்பற்றப்படுகின்றன. சமீபத்தில் ஊடகத்தில் வெளிவந்த செய்திகளை பொறுத்தவரை, FSSAI-ன் படி மெக்னீசியம் சிலிக்கேட்டை (Magnesium silicate - synthetic) தெளிவுபடுத்தும் சேர்மமாக பயன்படுத்துவது அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

FSSAI விதிமுறைகளின்படி, மரினேட் செய்யப்பட்ட சிக்கன் உட்பட அனைத்து KFC இறைச்சிகளும் சமைத்த பிறகு சாப்பிடுவதற்கு முற்றிலும் பாதுகாப்பானது. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு விரைவான தீர்வினை காண அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வழங்கப்படும் KFC தயாரிப்புகள் மிக உயர்ந்த தரம் மற்றும் நுகர்வுக்கு பாதுகாப்பானது என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் பிரபல தனியார் உணவகத்தின் உரிமம் ரத்து..திடுக்கிட வைக்கும் காரணம்! - Thoothukudi Food Safety Dept

ABOUT THE AUTHOR

...view details