தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 12:47 PM IST

ETV Bharat / state

புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு.. ஊராட்சி மன்றத் தலைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

கடத்தூர் அருகே அமையவுள்ள புதிய அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர், தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kadathur public and panchayat president protest against tasmac
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

தருமபுரி:கடத்தூரில் செயல்பட்டு வந்த இரண்டு அரசு மதுபானக் கடைகளில், ஒரு கடையை மாற்றி ஒசஅள்ளி ஊராட்சியில் வேடியூர் அருகே அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மாலை நேரங்களில் சொந்த ஊருக்கு தனியாக வருகின்றனர்.

இப்பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் மது வாங்குபவர்கள், இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள விவசாய நிலங்களில் அமர்ந்து மது அருந்தி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில், புதியதாக ஒரு கடை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகம் தலைமையில், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக மனு அளித்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், இப்பகுதியில் மதுபான கடை அமையாது. அவற்றை வேறு இடத்தில் மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (பிப்.19) அப்பகுதியில், மதுபான கடை அமைப்பதற்கான பொருட்கள்களை இறக்கி வைத்துள்ளனர். இதனையறிந்த கிராம மக்கள், ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகம் தலைமையில், மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளனர். அப்பொழுது, ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகம், காரில் எடுத்து வந்த ஐந்து லிட்டர் டீசலை உடலின் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்றத் தலைவர் தீக்குளிக்க முயற்சி

அப்பொழுது, ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவலர் துறையினர் அவரை மீட்டு, டீசல் கேனை பறிமுதல் செய்து, அவர்மீது தண்ணீரை ஊற்றினர். இதனையடுத்து, தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை இங்கிருந்து திரும்பிச் செல்வதில்லை என்று கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது, அப்பகுதியில் மதுபான கடை அமைக்கக்கூடாது என டாஸ்மார்க் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அப்பகுதியில் கடை அமையாது. வேறு இடத்திற்கு கடை மாற்றப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

இதற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், அப்பகுதியில் மதுபான கடை அமைந்தால், நாங்கள் அதே இடத்தில் தற்கொலை செய்து கொள்வோம் என்று தெரிவித்து போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால், சுமார் 2 மணி நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு! 6 டிரங்கு பெட்டிகளுடன் வர நீதிமன்றம் உத்தரவு! மொத்தம் எவ்வளவு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details