தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் ஜோதிமணி போட்டி.. கரூர் களம் எப்படி இருக்கிறது? - Karur lok sabha Constituency - KARUR LOK SABHA CONSTITUENCY

Karur Constituency Congress candidate: கரூர் நாடாளுமன்றத் தொகுதியில், திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக, ஏற்கனவே கரூர் எம்.பி-யாக உள்ள ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Karur Constituency Congress candidate jothimani
கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 3:38 PM IST

கரூர்:கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கூடலூர் மேற்கு கிராமம், பெரியதிருமங்கலம் என்னும் ஊரில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர், ஜோதிமணி. தனது கல்லூரி காலத்தில், மாணவர் சங்கத் தலைவரில் தொடங்கி, இன்று இந்திய காங்கிரஸில் இணைந்து, இளைஞர் காங்கிரஸில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.

முதன்முதலாக இவர், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில், கரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கரூர் மாவட்டச் செயலாளராக இருந்த செந்தில் பாலாஜியை எதிர்த்து நின்று, 55 ஆயிரத்து 593 வாக்குகள் பெற்று, 44 ஆயிரத்து 145 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திமுக கூட்டணியின்றி தனித்து நின்ற காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நின்ற ஜோதிமணி, 30 ஆயிரத்து 420 வாக்குகள் பெற்று, அதிமுக சார்பில் நான்காவது முறையாக கரூர் தொகுதியில் போட்டியிட்ட தம்பிதுரையிடம், 5 லட்சத்து 8 ஆயிரத்து 708 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

தொடர்ந்து, 2019-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், எம்.பியாக நான்கு முறை கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தம்பிதுரையுடன் மீண்டும் போட்டியிட்டார். அப்போது, திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களம் கண்ட ஜோதிமணி, 6 லட்சத்து 95 ஆயிரத்து 697 வாக்குகள் பெற்று, தம்பிதுரையை 4 லட்சத்து 20 ஆயிரத்து 546 வாக்குகள் வித்தியாசத்தில் முதல் முறையாக வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினரானார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இவருக்கும், திமுகவின் கரூர் மாவட்ட செயலாளராகவும், அமைச்சராகவும் இருந்த செந்தில் பாலாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும், கரூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்ட ஆட்சியர்களைச் சந்தித்தும், தமிழக முதலமைச்சரைச் சந்தித்தும், மக்கள் கோரிக்கைகளை பற்றி கோரிக்கை வைத்து வந்தார்.

இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று (சனிக்கிழமை) இரவு வெளியானது. அதில், ஜோதிமணிக்கு மீண்டும் காங்கிரஸ் தலைமை, கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பினை வழங்கியுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தமட்டில், அதிமுக வேட்பாளர் தங்கவேல், பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் இருவரும் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி என்பதால், கரூர் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க:விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி.. வெற்றி வாய்ப்பு யாருக்கு? - Viluppuram Lok Sabha Constituency

ABOUT THE AUTHOR

...view details