தமிழ்நாடு

tamil nadu

மதுரை துணை மேயர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு! காரணம் என்ன? - Madurai Deputy Mayor

மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மீது ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

Published : 4 hours ago

ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம்
ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் (Credit - ETV Bharat Tamil Nadu)

மதுரை: மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா. இவருக்கு ஒரு மகன் மற்றும் ஐந்து மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் முருகானந்தம் வீட்டின் அருகிலேயே முடி திருத்தகம் நடத்தி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வசந்தா ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த குமார் என்ற கோழி குமாரிடம் தன்னுடைய சொந்த வீட்டை அடமானமாக வைத்து ரூபாய் பத்து லட்சம் வட்டிக்கு கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வசந்தா தானது வீட்டை அடமானமாக வைத்து பெற்ற பணத்தை முழுமையாக செலுத்தி விடுவதாகவும், அதனால் அடமான கடன் பத்திரத்தை ரத்து செய்து கொடுக்க வேண்டும் எனவும் கோழி குமாரிடம் கேட்டுள்ளார். ஆனால், வசந்தா கோரியதற்கு மாறாக கோழி குமார் ரூ.15 லட்சம் தருவதாகவும் அதற்கு ஈடாக வீட்டை முழுவதும் கிரயம் செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில், அந்த வீட்டை எழுதிக் கேட்டு கோழி குமார் மற்றும் அவரது கூட்டாளிகளான கணேசன் என்ற வாய் கணேசன், முத்து என்ற புரோக்கர் முத்து ஆகிய மூன்று பேரும் வசந்தாவை தாக்கி மிரட்டியதாக ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் மே 7ஆம் தேதி வசந்த புகார் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து, வசந்தா கொடுத்த புகாரின் அடிப்படையில் கோழி குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் மீதும் ஜெய்ஹிந்த்ரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, கோழிக் குமாருக்கு ஆதரவாக மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன், புரோக்கர் முத்து ஆகியோர் கடந்த ஜூலை 30ஆம் தேதி அன்று வீட்டை கிரயத்திற்கு முடிக்கவும், முந்தைய வழக்கில் சாட்சி சொல்லக் கூடாது எனவும் பொது இடத்தில் வைத்து தன்னை தாக்கியதாகவும், ஆபாசமாகவும் சாதி ரீதியாகவும் மிரட்டியதாக மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் வசந்தாவும் அவரது மகன் முருகானந்தமும் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க:பாடகர் மனோ மனைவி தாக்கப்பட்ட விவகாரம்; சிறுவர் உட்பட இருவர் கைது!

இந்த நிலையில், மதுரை மாநகராட்சி துணைமேயர் நாகராஜன் மீது ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சட்டப்பூர்வமாக செய்ய முடியாததை செய்யச்சொல்லி கட்டாயப்படுத்துதல், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், பிறர் சொத்தின் மீது சட்டவிரோதமாக நுழைதல், காயத்தை ஏற்படுத்த முனைதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details