கும்பகோணம்:ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என பொய் சொல்லுவது கோழைத்தனம் இல்லாமல் என்ன? என அமைச்சர் சேகர்பாபுவிற்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம் பந்தநல்லூர் அருகேயுள்ள வேட்டமங்கலம் கிராமத்தில் உழவர் பேரியக்க மாநில தலைவர் கோ ஆலயமணியின் தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து இன்று ஆலயமணியின் இல்லத்துக்கு சென்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "திமுக அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பது கோழைத்தனம் என கும்பகோணத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க சோழ மண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாட்டில் பேசினேன். இதற்கு பதில் அளித்துள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பாமக வழக்குக்கு பயந்து, மத்திய அரசிடம் மண்டியிடுவது தான் கோழைத்தனம் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:"மத்திய அரசின் நெருக்கடிகளுக்கு மத்தியில் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு திமுக அரசு தான் கோழைத்தனமாக இருக்கிறது. இந்திய சட்டம் 2008ன் படி பீகார், தெலங்கானா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழக அரசும் அதே சட்டப்பிரிவின்படி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் அதிகாரம் உள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு முழு அதிகாரம் இருந்தும் இல்லை என்று கூறுவது தான் கோழைத்தனம்.
பாமக வழக்கிற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மற்ற மாநிலங்களுக்கு உள்ள அதிகாரம் தமிழக அரசுக்கு ஏன் இல்லை? அதிகாரம் இல்லை என்றால் கூட ஆட்சியில் இருப்பவர்கள் ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும். அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று பொய் சொல்வது தான் கோழைத்தனம். திமுக அரசை எதிர்க்கக் கூடிய அரசியல் இயக்கங்களையும் இணைத்து தேர்தலை சந்திப்பது குறித்து இப்போது சொல்ல இயலாது. பொறுத்திருந்து பாருங்கள்,"என்றார்.