திருநெல்வேலி:இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (பிப்.18) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முகமது அபூபக்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவல் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது மக்களின் மத சுதந்திரத்திற்கு எதிரானது. இந்திய அரசியல் அமைப்பு அளித்துள்ள மத உரிமைகளை வழங்காமல் சிறுபான்மை சமுதாயத்தை அந்நியப்படுத்தும் செயலை பாஜக செய்கிறது.
“மதுவிலக்கும், வருவாய் இல்லாத நிலையும்”:
சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிகமான வளர்ச்சி திட்டங்களை கவனம் செலுத்த வேண்டும். பூரண மதுவிலக்கு என்பதே முஸ்லீம் கொள்கை. படிப்படியாக மதுவிலக்கை அமல் படுத்துவோம் என்பதை தேர்தல் அறிக்கையில் திமுக சொல்லியிருந்தது. அரசியல் வருவாய் மிகவும் குறைந்துள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கான நிதியைக் கொடுப்பதில்லை.
அதன் காரணமாக உடனடியாக பூரண மதுவிலக்கை அமல் படுத்துவதிலும், மதுக் கடைகளை திறப்பதிலும் பிரச்சினை எழுந்துள்ளது. அதிகமான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வருவாய் அதிகரித்தால் படிப்படியாக மதுக் கடைகளை மூடுவார்கள் என்ற நம்பிக்கை இந்தியாவில் முஸ்லிம்களுக்கு உள்ளது.
தவெக-வை இயக்குவது யார்?:
தமிழக வெற்றிக் கழகம் யாரால் இயக்கப்படுகிறது என்பதை மக்கள் அறிவார்கள். அவர் கேட்காமலேயே பாஜகவால் அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களை சந்திப்பதற்கு விஜய் ரோட்டுக்கு வராமல் அவர்களை வீட்டுக்கு அழைத்துப் பேசுகிறார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால், மக்கள் அங்கீகரிக்க வேண்டியது தான் அவசியம்.