தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடல்வால் அறுவை சிகிச்சையால் சிறுவன் உயிரிழப்பு? நடவடிக்கை எடுக்க இந்து புரட்சி முன்னணி கோரிக்கை!

Mayilduthurai: குடல்வால் அறுவை சிகிச்சையின்போது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், உரிய விசாரணை செய்து மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு இந்து புரட்சி முன்னணி அறிவித்துள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 10:20 AM IST

இந்து புரட்சி முன்னணி
இந்து புரட்சி முன்னணி

இந்து புரட்சி முன்னணி

மயிலாடுதுறை:மேலமங்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர், ஆசிரியர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் கிஷோர் (12). ஏழாம் வகுப்பு படிக்கும் கிஷோருக்கு, வயிற்று வலி காரணமாக கடந்த ஜனவரி 29ஆம் தேதி மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடல்வால் (அப்பன்டிஸ்) அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கிஷோர் உயிரிழந்துள்ளார்.

ஆனால், கிஷோர் உயிரிழந்ததைக் கூறாமல், மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்ததாகவும், 12 வயது சிறுவனுக்கு வயதைக் கருத்தில் கொள்ளாமல், உடல் எடையை வைத்து அதிக அளவில் மயக்க மருந்து செலுத்தியதாகவும், தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம், கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி, தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்து கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், தமிழ்நாடு இந்து புரட்சி முன்னணி நிறுவனத் தலைவர் சந்திரகுமார், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அனகை ஏ.செல்வம் மற்றும் கட்சியினர், உயிரிழந்த சிறுவன் கிஷோர் வீட்டிற்குச் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது, “மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததை சிறுவனின் குடும்பத்தார் முழுமையாக நம்பினர். ஆனால், இதுவரை மருத்துவமனை நிர்வாகத்தின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிறுவனின் உயிரிழப்பு, தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படவில்லை. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறுவன் கிஷோரின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்; நிபுணர் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

ABOUT THE AUTHOR

...view details