மதுரை: நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் முன்ஜாமீன் கோரி மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக, திருச்சி சைபர் கிரைம் போலீசார், என்னை கைது செய்தனர். பின்னர் நீதிபதி சிறையில் அடைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் விடுதலை செய்தனர்.
கைது செய்யப்பட்டதற்கு எஸ்.பி. வருண் குமார்தான் காரணம் எனவும், விமர்சனங்களைச் சீமான் முன்வைத்திருந்தார். அதற்கு சமூக வலைத்தளங்களில் மோசமான கமெண்டுகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. இது தொடர்பாக வருண்குமார் எஸ்பியால் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் என்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன். ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "சாட்டை துரை முருகன் உள்ளிட்டோர் மீது காவல்துறை அதிகாரி வழக்குப்பதிவு செய்து தனது கடமையைச் செய்தார் என்பதற்காக, திருச்சி எஸ்பி வருண் குமார், மீது சமூக வலைத்தளங்களில் அவதூறாகப் பதிவு செய்து வருகின்றனர். இது பணியில் உள்ள அதிகாரிகளை அச்சுறுத்தும் செயல். இவர்களை கைது செய்ய வேண்டும். எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது" என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது