தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாப்பூர் கோயில் மயில் சிலை மாயமான வழக்கு: குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய இயலாது - மதுரை ஐக்கோர்ட் அதிரடி! - High Court Madurai Bench - HIGH COURT MADURAI BENCH

High Court Madurai Bench: மயிலாப்பூர் கோயில் மயில் சிலை மாயமான விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய இயலாது என்று வழக்கைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

High Court Madurai Bench
உயர் நீதிமன்ற மதுரை கிளை புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 9:21 PM IST

மதுரை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த கற்கள் பதிக்கப்பட்ட பழமையான மயில் சிலையும், ராகு, கேது சிலைகளும் மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆதாரங்களைத் தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், சிலை கடத்தல் சிறப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் செயல் அலுவலராக இருந்த திருமகள், இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களான வேணு ஸ்ரீனிவாசன், முத்தையா ஸ்தபதி, அர்ச்சகர்கள் மற்றும் கோயிலின் ஊழியர்கள் சேர்ந்து திட்டமிட்டு சிலைகளை மாற்றியது தெரியவந்தது.

இதன் காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கின் விசாரணை கும்பகோணம் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிலை மாயமான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திருமகள் உள்ளிட்டோர், கும்பகோணம் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நாகார்ஜுன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், "சாட்சிகள் முறையாக விசாரிக்கப்படாமல், அவசரகதியில் விசாரணை முடிக்கப்பட்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் பிரிவுகள் ஏற்கத்தக்கதல்ல" என வாதிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, அரசு தரப்பில், "மனுதாரர்களால் திருடப்பட்ட சிலைகள் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. விசாரணை சரியான பாதையிலே சென்று கொண்டிருக்கிறது. ஆகவே, வழக்கின் முக்கியத்துவம் கருதி மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, " வழக்கு தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய இயலாது. ஆனால் (குற்றவாளியைக் காப்பாற்றும் நோக்குடன் தனக்குத் தெரிந்த தகவலையும் மறைப்பது அல்லது பொய்யான தகவலைத் தரும் குற்றத்திற்கான) மனுதாரர் மீதான வழக்கில் IPC பிரிவு 201ஐ ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது" என உத்தரவிட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

இதனையடுத்து, இதே கோரிக்கையை முன்வைத்து, கபாலீஸ்வரர் கோயிலின் அப்போதைய தலைமை ஸ்தபதி முத்தையா, இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் தனபால், கோயில் ஊழியர்கள் பாலு மற்றும் மகேஷ் ஆகியோரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் - உச்சநீதிமன்றம் உத்தரவு! - Bail To Arvind Kejriwal

ABOUT THE AUTHOR

...view details