மதுரை: திருச்செந்தூர் கோயில் விரிவாக்க பணிகளுக்காக 100 கோடி ரூபாயை கோயில் நிதியிலிருந்து பயன்படுத்துவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட கோரிய மனுவுக்கு, இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர், சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அறங்காவலர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரமணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் மேம்பாட்டு பணிக்கென ரூ.100 கோடியை கோயில் நிதியிலிருந்து விடுவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது சட்டவிரோதமானது. பேருந்து நிலையம் கட்டுதல் போன்ற பணிகளும் இந்த நிதி பயன்பாட்டு கீழ் வருகின்றன. அரசின் பணிகளுக்காக கோயில் பணத்தை செலவிட இயலாது. ஆகவே, திருச்செந்தூர் கோயில் விரிவாக்க பணிகளுக்காக 100 கோடி ரூபாயை கோயில் நிதியிலிருந்து பயன்படுத்துவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.