தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலிக்காக அந்த நொடி.. மரணத்தை முன்பே கணித்த தீபக் ராஜா.. நெல்லை கொலை வழக்கில் 5 பேர் கைது! - nellai deepak raja murder - NELLAI DEEPAK RAJA MURDER

Nellai youth murder case: பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக் ராஜா கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வரும் நிலையில், தீபக் ராஜாவை குறித்து கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

உயிரிழந்த தீபக் ராஜா
உயிரிழந்த தீபக் ராஜா (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 12:03 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தைச் சேர்ந்த தீபக் ராஜா என்ற தீபக் பாண்டியன் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை அடுத்த கேடிசி நகரில் உள்ள ஹோட்டல் முன்பு மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

முகத்தை குறி வைத்து சிதைத்த கும்பல்: குறிப்பாக அக்கும்பல் தீபக் ராஜாவின் முகத்தை மட்டும் குறி வைத்து மிக கொடூரமாக வெட்டியதில் அவரது முகம் சிதைந்தது. இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஹோட்டல் முன்பிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். அதில் மர்ம கும்பல் சில அடி தூரத்தில் இருந்து தீபக் ராஜாவை ஓட ஓட விரட்டி வெட்டியது தெரியவந்தது.

கொலை வழக்குகளில் தொடர்பு: இந்நிலையில், குற்றவாளிகளை பிடிக்க மாநகர காவல் ஆணையர் மூர்த்தி உத்தரவின் பேரில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட தீபக் ராஜா மீது சில கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையில் சுபாஷ் பண்ணையார் தோட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டைக் கொலையில் தீபக் ராஜா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், நெல்லை பாளையங்கோட்டை சிறையில் கைதி முத்து மனோ என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக நெல்லை தாழையூத்து கட்டிட காண்ட்ராக்டர் கண்ணன் என்பவரை கொலை செய்த வழக்கில் தீபக் ராஜா குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர இன்னும் சில கொலை வழக்குகளும் தீபக் ராஜா மீது இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமூக மக்களுக்கு குரல்: மேலும் கடந்த 2012 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளராகவும் தீபக் ராஜா இருந்துள்ளார் அதேபோல, தனது சமூக மக்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் குரல் கொடுக்கும் நபராக இருப்பதுடன் பொது இடங்களில் சாதி ரீதியாக ஆக்ரோஷமாக தீபக் ராஜா பேசுவது போன்ற வீடியோக்களும் வெளியானது.

குறிப்பாக மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தீபக் ராஜா பேசும்போது, ''அடிக்கு அடி தான் தீர்வு' உங்களுடன் மோத நாங்கள் இருக்கிறோம். அப்பாவி மக்களை எதற்கு தொந்தரவு செய்கிறீர்கள்'' என்று ஆவேசமாக பேசியிருந்தார். மேலும், தனது சமுதாயத்தைச் சேர்ந்த நபர்கள் யாராவது இறந்தால் அவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறுவது, அவர்களுக்கு உதவி செய்வது போன்ற பல்வேறு விஷயங்களை செய்து வந்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு சமூகத்தின் தலைவராகவே தீபக் ராஜா செயல்பட்டு வந்துள்ளார்.

பசுபதி பாண்டியன் மறைவுக்கு பிறகு நெல்லையைச் சேர்ந்த கண்ணபிரான் என்பவருடன் இணைந்து தீபக் ராஜா பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட நிகழ்வுகளை வைத்து தீபக் ராஜா சாதி ரீதியான மோதலில் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டாரா என்று கோணத்தில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், தீபக் ராஜா கொலை வழக்கில் தொடர்புடைய இன்று 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. குறிப்பாக ஹோட்டலில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த காட்சிகள் பதிவான நபர்கள் தான் இந்த ஐந்து பேருமா என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.

தீபக் ராஜா தனியாக சிக்கியது எப்படி?:தனது சமுதாயத்திற்காக அதிரடியாக வேலை பார்த்து வந்த தீபக் ராஜா பெரும்பாலும் ஒரே இடத்தில் இருப்பதில்லை என கூறப்படுகிறது குறிப்பாக இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் இருப்பதால் அடிக்கடி நீதிமன்றங்களில் விசாரணைக்காக வந்து சென்றுள்ளார். மேலும், முன்பகை காரணமாக தனக்கு எந்த நேரத்திலும் பிரச்சினை நேரிடலாம் என்று தீபக் ராஜா நெல்லையில் பெரும்பாலும் தங்குவதில்லையாம்.. மதுரை, திருச்சி என பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதே சமயம் தீபக் ராஜா இளம் வயதில் இருந்தே ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் சட்டக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தீபக் ராஜா முதலில் காதலை மறுத்துள்ளார். ஒரு கட்டத்தில் தீபக் ராஜா அப்பெண்ணின் காதலை ஏற்றுக்கொண்டு இருவரும் பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் தீபக் ராஜாவின் காதலி தனது தோழிகளுக்கு விருந்தளிக்க வேண்டும் என்று தீபக் ராஜாவை அழைத்துள்ளார். பெரும்பாலும் தனியாக செல்வதை தவிர்த்த தீபக் ராஜா தனது காதலி அழைத்ததின் பேரில் அன்று தனியாக அவருடன் சென்று சம்பந்தப்பட்ட ஓட்டலில் அனைவரும் உணவருந்தியுள்ளனர்.

உணவருந்திவிட்டு தீபக் ராஜா மட்டும் வெளியே காரை எடுக்க வந்தபோதுதான் அவரை நோட்டமிட்ட மர்ம கும்பல் விரட்டி விரட்டி அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது. கைதான 5 பேரிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் கொலைக்கான முழு பின்னணி விரைவில் தெரிய வரும்.

இதையும் படிங்க:நெல்லை வாலிபர் கொடூர கொலை.. கதறிய காதலி.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

ABOUT THE AUTHOR

...view details