தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம்.. நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Nainar Nagendran: தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததால், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Nainar Nagendran
நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 2:13 PM IST

திருநெல்வேலி: 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால், அரசியல் கட்சிகள் அனல் பறக்க தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருநெல்வேலி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் விதிகளை மீறி, இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் நட்சத்திர வேட்பாளராக அறியப்படும் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இதனால், அவர் அந்த தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ராதாபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் செய்தார். இறுதியாக, பழவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதனால், இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் வந்துள்ளனர்.

இரவு 10 மணிக்கு மேல் அப்பகுதிக்கு வந்த நயினார் நாகேந்திரன், ஒலிபெருக்கியில் பேசாமல் மக்களை மட்டும் சந்தித்து சென்றுள்ளார். இரவு 10 மணிக்கு மேல் வாக்கு சேகரிக்கும் வகையில் எந்த ஒரு செயலிலும் ஈடுபடக் கூடாது என்பதால், தேர்தல் விதிமுறையை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக நயினார் நாகேந்திரன் மீது, தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் பாஜக உறுப்பினர் சதீஷ் உட்பட 3 பேரிடம் சுமார் நான்கு கோடி ரூபாய் பணம், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், தேர்தல் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், திருநெல்வேலி தொகுதியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பணம் கொடுக்க மாட்டோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக பேசி வரும் நிலையில், திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக எடுத்துக் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, சென்னையில் உள்ள நயினார் நாகேந்திரனுக்குச் நெருக்கமான முருகன் என்பவர் வீட்டிலும், திருநெல்வேலியில் உள்ள கணேஷ் மணி என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில், கணேஷ் மணி என்பவரது வீட்டிலிருந்து, 100 வேஷ்டிகள் மற்றும் ரூ.2 லட்சம் பணம் உட்பட பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டலை நிர்வகித்து வரும் ஸ்ரீ ரங்கன் என்பவரது வீட்டிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில், அவரது வீட்டில் ரூ.3 லட்சத்து 72 ஆயிரம் பணம் இருந்துள்ளது. பணத்திற்கு உரிய கணக்குகளை காட்டியதால் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை.

தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் தொடர்புடைய இடங்களில் அடுத்தடுத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பேராவூர் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டமா? மயிலாடுதுறையில் 6வது நாளாக தேடுதல் பணி தீவிரம்! - Leopard Movement In Mayiladuthurai

ABOUT THE AUTHOR

...view details