மதுரை:எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய உத்தரவு விட வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவின் உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்திருந்த மனுவில், "கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய தேர்தல் ஆணையம், நிபந்தனையுடன் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொது செயலாளராக அங்கீகாரம் செய்தது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட கட்சி விதிகள் தொண்டர்களின் உரிமைக்கு எதிரானதாக உள்ளது.
தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் தனக்கு 70 வயது ஆகிவிட்டதாகவும், உடல்நல குறைபாடு காரணமாகவும் தன்னால் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக இயலாது என எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டு இருந்தார். வாக்காளர்களிடம் அதிமுக தனது ஆதரவை கணிசமாக இழந்தது. மேலும், தமிழகம் முழுவதும் இரண்டாம் வரிசைத் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி மற்ற கட்சிகளுடன் இனணந்து வருகின்றனர். ஏற்கனவே நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக கட்சி தொடர் தோல்வியை சந்தித்துவரும் நிலையில், வரும் தேர்தல்களிலும் உடல்நலக்குறைவு காரணமாக பிரச்சார பயணங்களை எடப்பாடி பழனிச்சாமியால் மேற்கொள்ள முடியாமல் போகலாம்.
அவ்வாறான சூழலில் புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுப்பதற்கு, தற்போதைய விதிகளின்படி மற்றொரு தலைமையை தேர்வு செய்ய போர் எழும். கட்சியின் உறுப்பினர்களுக்கு தற்போது 2024ல் டிஜிட்டல் உறுப்பினர் அட்டைகள் ஜூன் 2023 தேதியிட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதிமுக தேர்தல் அரசியலில் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. 2019 மக்களவைத் தோல்விக்குப் பிறகு, 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2021 மற்றும் 2022 இல் உள்ளாட்சித் தேர்தல்களிலும், 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும் கட்சி தோல்வியை சந்தித்து வருகிறது.