தமிழ்நாடு

tamil nadu

ஃபார்முலா 4 கார் பந்தயம்.. இரவே தெரியாமல் மாறும் சென்னை.. என்னென்ன ஏற்பாடுகள் தெரியுமா? - chennai Formula 4 night Race

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2024, 5:53 PM IST

chennai Formula 4 night street Race: சென்னையின் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்கவிருப்பதையொட்டி என்னென்ன வசதிகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ள என்பதை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்கவுள்ள சாலைகள்
ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்கவுள்ள சாலைகள் (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: இந்தியாவில் முதன்முறையாக இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் ஆகஸ்ட் 30இல் தொடங்கி செப்டம்பர் 1 வரை நடைபெற இருக்கிறது. இதற்காக தீவுத்திடலை சுற்றி 3.5 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு சாலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. கார் பந்தயம் நடைபெறும் கொடிமரச்சாலையில் இந்திய ராணுவத்தின் அலுவலகம் இருப்பதால், ராணுவத்திடமிருந்து தடையில்லா சான்றும் பெறப்பட்டு கார் பந்தயம் நடைபெற தயாராக இருக்கிறது.

கார் பந்தயம் நடைப்பெறும் சாலைகள்: ஃபார்முலா 4 கார்பந்தயமானது, தீவு திடலில் இருந்து புறப்பட்டு கொடிமர சாலை, அண்ணா சாலை, சுவாமி சிவானந்த சாலை வழியாக நேப்பியர் மேம்பாலம் வந்து மீண்டும் தீவுத்திடலை அடைவதை ஒரு சுற்றாக கணக்கிடப்படுகிறது.

இந்த கார் பந்தயமானது தீவுத்திடலில் தொடங்கி, கொடிமர சாலை வழியாக சென்று இடதுபுறம் திரும்பி, அண்ணா சாலையில் 1 கிலோ மீட்டர் தூரம் சென்று பின்னர் அண்ணா சாலையிலிருந்து சுவாமி சிவானந்தா சாலைக்கு வலதுபுறம் திரும்பி 1 கிலோ மீட்டர் தூரம் சென்று நேப்பியர் பாலம் அடைந்து மீண்டும் தீவு திடலை சென்றடைகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பு வசதிகள்: கார் பந்தயத்திற்காக மூன்று 3.5 கிலோமீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே போடப்பட்டிருந்த சாலைகள் அகற்றப்பட்டு கார் பந்தயத்திற்கு ஏற்றவாறு சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டது. குறிப்பாக கார்பந்தத்திற்காகவே, கார் பந்தயம் நடத்தும் நிறுவனம் 200 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும் தகவல் வெளிவர தொடங்கியுள்ளது.

இந்த கார் பந்தயத்தை சாலையின் இரண்டு பக்கங்களிலும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நாற்காலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. பந்தயத்தை பார்க்கும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு எந்தவித ஆபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்புகளும் செய்யப்பட்டிருக்கிறது.

சாலையில் இருந்து நான்கு அடி உயரத்திற்கு கான்கிரீட் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் கான்கிரீட் சுவரிலிருந்து 15 அடி உயரத்திற்கு உறுதியான இரும்பு வேலிகள் போடப்பட்டிருக்கிறது. பந்தயத்தின் போது விபத்து ஏற்பட்டாலும், பொதுமக்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

ஜொலிக்கும் மின் கம்பங்கள்: போட்டிகள் அனைத்தும் இரவு நேரத்தில் நடைபெற இருப்பதால் நூற்றுக்கு மேற்பட்ட உயர் மின் கம்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு கம்பத்திற்கு ஆறு விளக்குகள் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாலையின் இரு பக்கத்திலும் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் ஒரு மின்விளக்குகளில் 960 வாட் திறன் கொண்ட மின் விளக்கு பயன்படுத்தப்படுவதால், ஆயிரக்கணக்கான மின்விளக்குகள் இரவை பகலை போலவே பிராகாசிக்கும். கார் பந்தையத்தை பார்ப்பதற்கு டிக்கெட்டுகளின் விவரங்களும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டிக்கெட் விற்பனை: இதில் 1699 ரூபாய் முதல் 10999 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட் விற்பனையானது insider.in என்ற இணையதளத்தின் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கார் பந்தயம் ஆகஸ்ட் 30 ,31 செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற இருப்பதால் இன்னும் இரண்டு நாட்களில் இருக்கக்கூடிய நிலையில் ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:நோ பார்க்கிங்கில் இருக்கும் வண்டிகளுக்கு குறி.. பகீர் வாக்குமூலம்.. சென்னையில் சீரியல் திருடன் கைது!

ABOUT THE AUTHOR

...view details