தமிழ்நாடு

tamil nadu

பொறியியல் படிப்பு கலந்தாய்வு: சான்றிதழ் சரிபார்ப்பு நாளை துவக்கம்; தரவரிசைப் பட்டியல் வெளியீடு எப்போது? - Certificate verify for engineering

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 6:30 PM IST

Engineering: பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு கட்டணம் செலுத்திய 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நாளை முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அண்ணா பல்கலைக்கழகம் கோப்பு படம்
அண்ணா பல்கலைக்கழகம் கோப்பு படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:2024 -25 ஆம் கல்வியாண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் கடந்த மே 6 ஆம் தேதி முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தனர். அதன் பின்னர் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, கூடுதலாக கடந்த ஜூன் 10,11 ஆகிய தேதிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

இந்த கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 மாணவர்கள் கட்டணம் செலுத்தி உள்ளனர். 1 லட்சத்து 93 ஆயிரத்து 853 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு கட்டணம் செலுத்தியுள்ள 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 மாணவர்களுக்கு சமவாய்ப்பு எண் எனப்படும் ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விளையாட்டுப் பிரிவில் உள்ள 500 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்த 4,489 விளையாட்டு வீரர்களுக்கு இன்று முதல் 23 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

இவர்களில் கட்டணங்களைச் செலுத்திய மாணவர்களின் சான்றிதழ்கள் நாளை (ஜூன்.13) முதல் 30 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள், தமிழ்நாடு பொறியியல் உதவி மையங்களில் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. கட்டணங்களை செலுத்தியவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டியது இருந்தாலும் அதனையும் பெற்று பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

அதன் பின்னர் தகுதியான மாணவர்களுக்கு ஜூலை 10 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு https://www.tneaonline.org என்ற இணையதளத்தினையும், மாணவர்கள் தங்களின் பயனாளர் பதிவிலும் தெரிந்துக்கொள்ளலாம்.

முன்னதாக, கடந்த 2023ஆம் ஆண்டில் 2 லட்சத்து 29ஆயிரத்து 175 மாணவர்கள் கலந்தாய்வுக்கு பதிவு செய்ததில், 1 லட்சத்து 87 ஆயிரத்து 847 மாணவர்கள் கட்டணம் செலுத்தினர். அவர்களில் தகுதியான 1 லட்சத்து 78 ஆயிரத்து 959 மாணவர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டனர்.

2023 -24 கல்வியாண்டுக்கான கலந்தாய்வுக்கு 474 கல்லூரிகளில் மொத்தம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 196 பொறியியல் படிப்புகளுக்கான இடங்களுக்கு அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி வழங்கியது. அதில், 1 லட்சத்து 69 ஆயிரத்து 887 மாணவர்கள் சேர்ந்தனர். அரசுப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படித்த மாணவர்களுக்கான மொத்த இடங்கள் 12,136 ஆகும். அதில் 9,960 மாணவர்கள் சேர்ந்தனர்.

அதேபோல், கடந்த 2022ஆம் ஆண்டில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 115 மாணவர்கள் பதிவு செய்ததில், 1 லட்சத்து 67ஆயிரத்து 387 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி கலந்தாய்வில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சென்னை தெருநாய்கள் பிரச்சனை: மாநகராட்சி ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன? - chennai corporation dog census

ABOUT THE AUTHOR

...view details