தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழை: மின் விபத்துகளை தடுக்க TANGEDCO முக்கிய எச்சரிக்கை..! பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன..?

தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், மின்சாரம் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான முக்கிய அறிவுறுத்தல்களை மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வழங்கியுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 8 hours ago

மின் விபத்தை தவிர்க்க பாதுகாப்பு வழிமுறைகள்
மின் விபத்தை தவிர்க்க பாதுகாப்பு வழிமுறைகள் (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

அறிவுறுத்தல்கள்:

  • ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்திற்கும் செயற்பொறியாளர், சிறப்பு அலுவல் அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும். இவரின் தலைமையின் கீழ், அந்த மின் பகிர்மான வட்டத்தில் கோட்ட அளவில் 15 பேர் அடங்கிய இரண்டு பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
  • மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இயங்கும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் தேவைப்படும் அனைத்து தளவாடப் பொருட்களையும் இருப்பில் வைத்துக் கொள்வதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  • ஜே.சி.பி., கிரேன்கள் உள்ளிட்ட வாகன உரிமையாளர்களின் செல்போன் எண்களை முன்னமே கேட்டறிந்து அவைகளின் தயார்நிலை உறுதி செய்யப்பட வேண்டும். துணை மின் நிலையங்களில் டீசல் ஜெனரேட்டர், நீர் வெளியேற்றும் மின் மோட்டார்கள் மற்றும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.
  • பேரிடர் காலங்களில் ஈடுபடும் பணியாளர்கள் தங்குவதற்கு உரிய பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். வாரிய வாகனங்கள் அனைத்தும் செப்பனிடப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டு
    தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • மின் தடங்கல் ஏற்படின் முதற்கட்டமாக மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன்
    டவர்கள் அனைத்திற்கும் முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.
  • சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கும் பகுதிகளில், Pillar Box-கள் அனைத்தும் உரிய முறையில் பராமரிக்கப்படுவதை அந்தப் பகுதியை சார்ந்த செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும்.
  • காற்றுடன் கூடிய மழையின் போது மிகத் தாழ்வான நிலையில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் அறுந்து விழுவதை தடுக்க உரிய நடவடிக்கையினை போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும்.
  • இது போன்ற மழைக் காலங்களில் உயர் அலுவலர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினருடனும், தீயணைப்பு துறையினருடனும் எப்பொழுதும் தொடர்பில் இருக்க வேண்டும். அனைத்து அலுவலர்களும் தமது அலைபேசியை எந்தக் காரணம் கொண்டும் OFF செய்து வைக்கக்கூடாது. இதனை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கான பொதுவான பாதுகாப்பு அறிவுரைகள்:

  • மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் (Pillar Box) மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
  • சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பதோ, ஓடுவதோ,
    விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும். தாழ்வாக தொங்கிக்கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும்.
  • ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.
  • வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும். மின்சார கம்பத்திலோ அல்லது அதற்காக போடப்பட்டுள்ள ஸ்டே வயரின் (stay wire) மீதோ கொடி கயிறு கட்டி துணி காய வைக்க வேண்டாம். மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பங்களிலோ கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம்.
  • மின் சேவைகள் மற்றும் தடை குறித்த புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தை 94987 94987 பொது மக்கள் தொடர்புக் கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details