தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

ETV Bharat / state

"மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம்" - திமுக பவள விழாவில் மு.க.ஸ்டாலின் சூளுரை! - dmk pavala vizha kanchipuram

திமுக விதைக்க நினைக்கும் சிந்தனைகளுக்கான அடித்தளம்தான் தோழமை இயக்கங்கள் ஒன்றாக இருக்கும் இந்த மேடை! என்றும், திமுக நூற்றாண்டைக் கடப்பதற்குள், மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம்! எனவும் திமுக பவள விழாவில் கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.

மு.க.ஸ்டாலின் உரை
மு.க.ஸ்டாலின் உரை (Credits - ETV Bharat Tamilnadu)

காஞ்சிபுரம்:திமுக பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நேற்று (செப்.28) நடைபெற்றது. திமுக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்; இங்குள்ள தலைவர்கள் ஒன்றாதல் கண்டே!”... “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்; இங்குள்ள தமிழர் காஞ்சியில் ஒன்றாதல் கண்டே!”...

வீழ்ச்சியுற்ற தமிழ்நாட்டை எழுச்சி பெற வைக்கத் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சி மண்ணில், அவர் உருவாக்கிய பேரியக்கத்தின் பவள விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம். இது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பெருமை! இந்த இயக்கத்தை உருவாக்கிய அண்ணா அவர்களுக்கும் பெருமை!

1949 செப்டம்பர் 17-ஆம் நாள் இந்த இயக்கத்தை சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் பேரறிஞர் அண்ணா அவர்களும், அவருடைய தம்பிமார்களும் தொடங்கியபோது, வானம் தன்னுடைய வாழ்த்துகளை மழையாகப் பொழிந்தது. வான்மழை வாழ்த்தில் உருவான கழகம்தான், இப்போது வையகம் வாழ்த்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது!

கழகத்தின் வெற்றி மூலமாகத் தமிழ்நாட்டை வளர்த்தார் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்ற தலைவர் கலைஞர் அவர்கள், அரைநூற்றாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அதன்மூலமாக தமிழ்நாட்டையும் வளப்படுத்தினார்! தலைவர் கலைஞர் விட்டுச் சென்ற பாதையில் இருந்து, இம்மியளவும் விலகாமல் திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம்.

சில கட்சிகள் உருவாக்கும் கூட்டணிகள், தேர்தல் நேரத்தில் உருவாகி, தேர்தல் முடிந்ததும் கலைந்துவிடும்! ஆனால் நம்முடைய கூட்டணி அப்படி அல்ல! நாம் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து கொள்கை எதிரிகளுக்கு பொறாமையாக இருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகள்,

* சமுதாயத்தில் சீர்திருத்தம்!

* பொருளாதாரத்தில் சமத்துவம்!

* அரசியலில் ஜனநாயகம்!

- இதை உருவாக்கத்தான் திமுக தோன்றியது; தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதை நிறைவேற்றிக் காட்டுவதற்காகத்தான் கட்சியும், ஆட்சியும் இருக்கிறது! இந்த உன்னதமான மூன்று கொள்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், அதிகாரம் பொருந்தியவைகளாக மாநிலங்கள் இருக்க வேண்டும். அதனால்தான் மாநில சுயாட்சிக் கொள்கையை தன்னுடைய இறுதி உயிலாகப் பேரறிஞர் அண்ணா வலியுறுத்தினார். மாநில சுயாட்சிக் கொள்கையை அடைவதற்காக, பல்வேறு முன்னெடுப்புகளை திமுக எடுத்திருக்கிறது.

மாநிலங்களை ஒடுக்கி, ஒற்றை ஆட்சித்தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்றுவதற்கு ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தைக் கொண்டுவரப் பார்க்கிறது பா.ஜ.க. அரசு. ஒரே நாடு – ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது. இதைச் சொன்னால் - "1967 வரைக்கும் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒன்றாகத்தான் தேர்தல் நடந்தது" என்று சொல்கிறார்கள். அப்போது இந்திய நாட்டின் மக்கள்தொகை என்ன? இப்போது மக்கள்தொகை என்ன? அன்றைய இந்தியாவும் - இன்றைய இந்தியாவும் ஒன்றா? அன்றைய வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இன்றைய வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

நான் ஆதாரத்தோடு சொல்கிறேன். 28 மாநிலங்கள் - 8 யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இது சாத்தியமா? 1951-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுமைக்கும் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 1,874. ஆனால், 2024 தேர்தலில் 8,360 பேர் போட்டியிட்டார்கள். அன்றைய தேர்தலும் இன்றைய தேர்தலும் ஒன்றா?

அதுமட்டுமல்ல, நாம் எழுப்பும் பல்வேறு கேள்விகளில் முக்கியமானது, இவர்களால் நாடாளுமன்றத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிந்ததா? நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலையே, ஏழு கட்டங்களாகத்தான் நடத்த முடிந்தது. நாடாளுமன்றத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியாதவர்கள், நாடாளுமன்றத் தேர்தலோடு, இந்தியாவில் இருக்கும் அனைத்துச் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவோம் என்று சொல்வது - "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் - வானம் ஏறி வைகுண்டம் காட்டுவேன்" என்று சொல்வது போன்று இருக்கிறது. இப்போது காஷ்மீரில் தேர்தல் நடக்கிறது. 90 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்துகிறார்கள். இந்த நிலையில் ஒரே தேர்தல் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?

ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே உணவு - ஒரே பண்பாடு - ஒரே தேர்வு - ஒரே தேர்தல் - ஒரே வரி என்று ஒரே பாட்டை பாடிக்கொண்டு இருக்கிறார்கள். நடைமுறை சாத்தியமற்ற – சிக்கல் நிறைந்த பிரச்சினை இது! மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கும் - மக்களாட்சித் தத்துவத்துக்கும் விரோதமானது. இதனால் என்ன நடக்கும்? பல மாநில அரசுகளின் பதவிக்காலம் குறையும்! மாநிலங்களில் குழப்பம் ஏற்படும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவையில் சொன்னதைதான் அவர்களுக்கு நான் சொல்ல விரும்புறேன்… "நமது அரசமைப்புச் சட்டத்தின், கூட்டாட்சி முறையிலுள்ள பல ஒற்றைத் தன்மைகளை எதிர்த்துப் போரிடுகின்ற ஒரு தாக்குதல் முன்னணியாக நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கருதிக் கொள்ளுங்கள்” என்று அண்ணா முழங்கினார்.

அதே முழக்கத்தில், நான் சேர்த்துச் சொல்வது, அந்த தாக்குதல் முன்னணியில், திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல - இங்கே இருக்கும் தோழமைக் கட்சிகளும் சேர்ந்துள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம் விதைக்க நினைக்கும் சிந்தனைகளுக்கான அடித்தளம்தான் தோழமை இயக்கங்கள் ஒன்றாக இருக்கும் இந்த மேடை!

நிறைவாக நான் சொல்ல விரும்புவது, 75 ஆண்டுகளைக் கடந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம், நூற்றாண்டைக் கடப்பதற்குள், மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம்! என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details