தமிழ்நாடு

tamil nadu

"இன்னார் இனியவர் என பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்" - ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து அமைச்சர் சேகர் பாபு! - MINISTER SEKAR BABU

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 14, 2024, 4:16 PM IST

MINISTER SEKAR BABU: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இன்னார் இனியவர் என்று இல்லாமல் தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் 2024-25ஆம் ஆண்டு அறிவித்த அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், எம்.கே.பி. நகர் சென்ட்ரல் அவென்யூ சாலையில் புதிதாக அமையுள்ள சமுதாய நலக்கூடம், ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இளையா தெருவில் அமையவுள்ள விளையாட்டுத் திடல் போன்ற திட்டங்கள் அமைய உள்ள இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு கள ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "வடசென்னை வளர்ச்சி திட்டத்தில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தொடர் ஆய்வு நடைபெற்று வருகிறது. வட சென்னையில் மொத்தம் 219 திட்டங்கள் ரூ.4,378 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டன. அதில் 100 திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது, மீதமுள்ள 119 திட்டப் பணிகள் வெகு விரைவில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது.

வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைகின்ற வகையிலும், வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு நாம் வாக்களிக்காமல் தவறிவிட்டோமே என்று வருத்தப்படுகின்ற அளவுக்கு எங்களுடைய பணிகள் இருக்கும் என முதலமைச்சரின் வார்த்தைக்கு எடுத்துக்காட்டு தான் இன்று விக்கிரவாண்டியில் மாற்றுக் கட்சியினரும் திமுகவை ஆதரித்து வாக்களித்துள்ளார்கள்.

தொடர்ந்து இந்தியா கூட்டணி அனைத்து இடங்களில் வெல்லும், இந்தியாவில் இருக்கின்ற அனைத்து இடங்களிலும் இந்தியா கூட்டணியின் பெயரைச் சொல்லும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையில் உள்ளது. இன்னார் இனியவர் என்று இல்லாமல் தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும், குற்றவாளிகள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத் தருவோம் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

நிச்சயம் இந்த ஆட்சியைப் பொறுத்தவரை நீதியின் பக்கம் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை தப்ப விட மாட்டார்கள். சீமான் வாய்க்கொழுப்பிற்கு அடுத்தடுத்த தேர்தலில் மக்கள் இன்னும் அதிகமான பாடங்களை கற்பிக்கத் தயாராக இருக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை.. எடப்பாடி பழனிசாமி கருத்து! - Edappadi K Palaniswami

ABOUT THE AUTHOR

...view details