தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஆளுநரைப் பயன்படுத்தி மத்திய அரசு போட்டி சர்க்கார் நடத்துகிறது" - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

சில ஆண்டுகளாகவே உரிய நிவாரணம் வழங்காமல் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், பாஜக அல்லாத 10 மாநிலங்களில் ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி மத்திய அரசு போட்டி சர்க்கார் நடத்துவதாகவும் சிபிஐஎம் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிபிஐஎம் கே.பாலகிருஷ்ணன்
சிபிஐஎம் கே.பாலகிருஷ்ணன் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

மயிலாடுதுறை:மயிலாடுதுறை நீதிமன்ற சாலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாவட்ட செயற்குழு கட்டடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பங்கேற்று திறந்து வைத்தார். மேலும், மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “வடகிழக்கு பருவமழை தொடக்கத்திலேயே அதிகமான பாதிப்பு இருக்கும் என்ற அச்சம் மக்கள் மனதில் உள்ளது. டெல்டா மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெரிய அளவில் மழை இருக்கும் என்று அறிவிப்புகள் வருகிறது. சென்னையில் பெய்த மழையில் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் களத்திலே இருந்து மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பாதுகாக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராட்டுகள்.

சிபிஐஎம் கே.பாலகிருஷ்ணன் பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu)

உரிய நிவாரணம் வேண்டும்:வருகின்ற தொடர் மழை, வெள்ளம் போன்ற இடர்பாடுகளிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளில் பாதிக்கப்பட்ட நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்கள் குறித்து முறையான கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு இயற்கை இடர்பாடு பாதிப்புகளுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே உரிய நிதியை வழங்காததால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க முடியவில்லை. மத்திய அரசு தனது பாரபட்சத்தைக் கைவிட்டு மாநில அரசின் சுமையில் தானும் பங்கெடுத்து, உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்.

இதையும் படிங்க: திண்டுக்கல்லில் தொடரும் ரெய்டு.. பத்திரப்பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரொக்கம்.. ஆடிப்போன வத்தலகுண்டு!

ஆளுநர் பதவி தேவையில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிற்கு விரோதமாக தமிழர் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றிற்கு எதிராக பேசுவதைத் தொடர்ந்து வருகிறார். பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் ஆளுநர் தன் நடவடிக்கையை மாற்றிக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டிற்கு எதிராகச் செயல்படும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்று எல்லா கட்சியினரும் கோரிக்கை விடுத்தும், மத்திய அரசு ஆளுநரை மாற்றாமல் இருக்கிறது.

ஆளுநரின் பதவிக்காலம் முடிந்தும் மாற்றுவது குறித்து ஆலோசிப்பதாக மத்திய அரசு கூறுகிறது. எங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டிற்கும் மற்றும் எந்த மாநிலத்திற்கும் ஆளுநர் பதவி என்பது தேவையில்லை. பாஜக அல்லாத 10 மாநிலங்களில் ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி மத்திய அரசு போட்டி சர்க்கார் நடத்துவது கண்டிக்கத்தக்கது. மாநில அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகளை செயல்படுத்துவது தான் ஆளுநரின் கடமை என்று உச்ச நீதிமன்றம் பலமுறை தீர்ப்பு வழங்கியும், அதற்கு நேர்மறையாகத் தான் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் செயல்படுகிறார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்:இந்த போக்கை இந்தியா முழுவதும் மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்த்தாய் வாழ்த்தைத் திருத்தி பாடுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடம் என்ற வரி விடப்பட்டது சர்ச்சையான பின்னர்தான் வருத்தம் தெரிவிப்பதாக கூறுகிறார்கள். எப்படி அந்த வரி விடப்பட்டது என்பதற்கான விளக்கமும் சொல்லப்படவில்லை. அதனை உடனடியாக, அப்போதே சரி செய்திருக்க வேண்டும்.

பாஜகவுக்கு எதிராக இளைஞர்கள் திரள வேண்டும்: தமிழ்நாட்டில் தொகுப்பூதியம், மதிப்பூதியம் என்ற அடிப்படையில் பணியமர்த்தப்படும் நிலை உள்ளது. பணி பாதுகாப்பு, சம்பள பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு இல்லை என்றால் தமிழ்நாட்டை வறுமை மாநிலமாக மாற்றிவிடும். எனவே தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஆசிரியர்கள், செவிலியர்கள் மருத்துவர்களை உள்ளிட்டோரைப் பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். கார்ப்பரேட்களுக்கு, மதவாதிகளுக்கு ஆதரவாக இருக்கிற மத்திய பாஜக அரசை எதிர்த்து இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details