தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பருத்தி சாகுபடிக்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா? போராட்டத்தில் குதித்த விவசாயிகள் - ஏலம் ஒத்திவைப்பு! - Cotton Farmers protest in thanjavur

Cotton Tender Fair Price Issue: கும்பகோணம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த பருத்தி மறைமுக ஏலத்தில் போதிய விலை கிடைக்காததால் ஏமாற்றமடைந்த பருத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், பருத்தி ஏலம் ஜூலை 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 3:16 PM IST

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி
விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே கொட்டையூரில் தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு வாரம் புதன்கிழமையும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஜூன் 12ஆம் தேதி முதல் கடந்த 4 வாரங்களாக நடைபெற்ற பருத்தி ஏலத்தில், பருத்தி கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், குவிண்டால் பருத்தி ரூ.6,500 முதல் ரூ.7,500 வரை ஏலம் போன நிலையில், நேற்று 5வது வாரமாக நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 3,400 குவிண்டால் பருத்தியுடன், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்திருந்தனர். ஆனால், நேற்றைய ஏலத்தில் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.4,500, அதிகபட்சமாக ரூ.6,500, சராசரியாக ரூ.5,500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

அதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், பருத்தி சாகுபடிக்கு நாளுக்கு நாள் உற்பத்திச் செலவு அதிகமாகி வரும் வேளையில், கட்டுப்படியாகும் போதிய விலை கிடைக்கவில்லை எனக் கூறி, ஒழுங்குமுறை விற்பனைக்கூட நுழைவு வாயில் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் கும்பகோணம் - திருவையாறு பிரதான சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த வாரம் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.7,519 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.4,500 முதல் 6,500 வரை தான் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்திவாசன், மேற்கு காவல் ஆய்வாளர் ஜெகதீசன், கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் ஒழுங்குமுறை விற்பனை நிலைய கண்காணிப்பாளர் மாலினி முன்னிலையில், மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, விவசாயிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப இன்றைய ஏலத்தை முழுமையாக ரத்து செய்து விட்டு, மறு ஏலம் வருகிற 12ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மீண்டும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனை விவசாயிகள் அனைவரும் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: ரவுடிகளின் பட்டியலை கேட்ட சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ்.. அலறப் போகும் ரவுடிகள்!

ABOUT THE AUTHOR

...view details