தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நாளை முதல் பணிக்கு திரும்பும் சாம்சங் தொழிலாளர்கள்.. சிஐடியு கூட்டத்தில் முடிவு"

தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து, சாம்சங் இந்தியா தொழிற்சாலை ஊழியர்கள் நாளை முதல் (அக்.17) பணிக்கு திரும்ப உள்ளனர் என்று சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன்
சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் (Credits- ETV Bharat Tamil Nadu)

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள சாம்சங் இந்தியா தொழிற்சாலை நிறுவன ஊழியர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு, சிஐடியு தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சமரச பேச்சுவார்த்தை:இந்நிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டு பணிக்கு திரும்புவர் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சாம்சங் சிஐடியு தொழிற்சங்க பேரவை கூட்டம் காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மாநில தொழிற்சங்க தலைவர் சௌந்தர்ராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது.

சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

பேச்சுவார்த்தை வெற்றி:இதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் கூறுகையில் , “தலைமைச் செயலகத்தில் நேற்று 4 அமைச்சர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்து கொண்டோம். அதில் இருதரப்பு கருத்துக்களும் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் தொழிலாளர் நலத்துறை சில அறிவுரைகளை இருதரப்பும் அளித்தது.

இதையும் படிங்க:சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்; பணிக்கு திரும்புவது எப்போது?

பழிவாங்கும் நடவடிக்கை கூடாது:இதில் நிர்வாகம் தொழிலாளர்களை பழிவாங்க நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் அவர்களது கோரிக்கை குறித்த பதிலுரையை தொழிலாளர் நலத்துறையில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது. அதேபோல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

நாளை முதல் பணிக்கு திரும்புவோம்:இந்நிலையில் இன்று நடைபெற்ற தொழிலாளர் பேரவை கூட்டத்தில் நாளை முதல் பணிக்கு திரும்புவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் நிர்வாகம் தங்களது பதிலை தொழிலாளர் நலத்துறை இடம் அளித்தபின் எத்தனை கோரிக்கைகள் ஏற்கப்பட்டது என்பது தெரியவரும்” எனவும் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details