சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்! - chidambaram natarajar temple
Published : Jul 3, 2024, 12:22 PM IST
chidambaram aani thirumanjanam festival: சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் பத்து நாட்கள் நடைபெறவுள்ள ஆனித் திருமஞ்சன விழா இன்று (ஜூலை 3) கொடியேற்றத்துடன் துவங்கியது.
![சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்! - chidambaram natarajar temple ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03-07-2024/1200-675-21855858-thumbnail-16x9-cdl.jpg)
கடலூர்:உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் ஆண்டுக்கு ஆறுமுறை மகா அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆனித்திருமஞ்சனம் மற்றும் மார்கழி ஆருத்ர தரிசன விழாவின்போது உற்சவர் நடராஜப் பெருமானே கருவறையிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்.
இந்த ஆண்டு ஆனித் திருமஞ்சன தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. நடராஜர் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கிருஷ்ணசாமி தீட்சிதரால், கொடிமரம் ஏற்றப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டன. பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி வீதி உலா வர உள்ளது.
குறிப்பாக, நாளை நான்காம் தேதி சந்திர பிறை வாகன வீதி உலா, ஐந்தாம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதி உலா, ஆறாம் தேதி வெள்ளி பூத வாகன வீதி உலா, ஏழாம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதி உலா, எட்டாம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, ஒன்பதாம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, பத்தாம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நடைபெற உள்ளது.
முக்கிய விழாவான தேரோட்டம் 11ஆம் தேதியும், 12ஆம் தேதி ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் நடைபெற உள்ளன. கொடியேற்றத்துடன் இன்று துவங்கியுள்ள ஆனித் திருமஞ்சன விழா 10 நாட்களாக நடைபெறும் என்பதால் சிதம்பரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு காணப்படும். குறிப்பாக தேரோட்டம் மற்றும் திருமஞ்சன தரிசன விழாவின்போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.
விழாவையொட்டி, சிதம்பரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய விழா நாட்களில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேலூர் தங்க கோயிலில் 1000 ஆவது நாள் சிறப்பு யாகம்... திரளான பக்தர்கள் பங்கேற்பு!