தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரெட் அலர்ட்: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்
வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாட்டில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், "கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தஞ்சாவூர் பூதலூரில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி நிலை கொண்டுள்ளது. இது வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வட தமிழகம், புதுவை தெற்கு ஆந்திரப் பகுதிகளில் நிலைகொள்ளும். அரபிக்கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஓமன் கரைப்பகுதியில் நகர்ந்து செல்கிறது. எனவே, அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும்.

பாலச்சந்திரன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அடுத்த 24 மணி நேரத்திற்கு :டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை முதல் தீவிர கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக் 15 :டெல்டா மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக் 16 : டெல்டா மாவட்டங்கள் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யக்கூடும். மேலும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக் 17 : வடமேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க :சென்னைக்கு ரெட் அலர்ட்.. தலைமைச் செயலாளர் முருகானந்தம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

குமரிக்கடல், தமிழக கடற்கரைப் பகுதிகள், தெற்கு ஆந்திர கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, அரபிக்கடல் பகுதிக்கு அக் 14 - 16ம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ரெட் அலர்ட் : நாளை மறுநாள் (அக்.16) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்கள் கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யக்கூடும். அரபிக்கடல், வங்கக்கடல் இரண்டிற்கும் இடையில் வெவ்வேறு காலநிலை மாற்றங்கள் நிகழும் போது பல்வேறு வளிமண்டல சுழற்சிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இடத்திற்கேற்ப மழை அளவு மாறுபடும்" என தெரிவித்தார்‌.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details