மதுரை:ஜக்டோ ஜியோ அமைப்பினர் பணிப்புறகணிப்பு போராட்ட அறிவிப்பு தொடர்பாக, திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், 'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜியோ ஜாக்டோ திருச்சியில் 04.02.2025 அன்று நடைபெற்ற தங்களது மாநில அளவிலான கூட்டத்தில் அனைத்து தாலூகா தலைநகரங்களிலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 25 ஆம் தேதி, பணிபுறக்கணிப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பல வழக்குகளில் அரசு ஊழியர்கள் இவ்வாறு பணிபுறக்கணிப்பு போராட்டம் நடத்துவது சட்டவிரோதம் எனக்கூறி, அப்போராட்டத்துக்கு தடை விதித்துள்ளன. இநத நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தற்போது பணிபுறக்கணிப்பு மற்றும் சாலை மறியல் குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு சட்டவிரோதமானது.
இவர்களின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும் அது அவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பிரச்சனை. சாலை மறியல் நடைபெற்றால் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர், மருத்து தேவைகளுக்காக செல்பவர்கள், தினசரி கூலி வேலைக்கு செல்பவர்கள், தனியார் துறையில் பணிபுரிபவர்கள், போராட்டத்தில் பங்குபெறாத ஊழியர்கள் என பல தரப்பினரும் பாதிப்பு அடைவார்கள்.
மேலும் சாலை மறியலில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் திருமண மண்டபங்களில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்றவற்றை அளிக்க வேண்டும். இதனால் அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்படுகிறது.