தமிழ்நாடு

tamil nadu

வயநாடு நிலச்சரிவு: ஆட்டோ சவாரி வருமானத்தை நிவாரண நிதியாக கொடுக்கும் சென்னை பெண் ஒட்டுநர்! - Woman Auto Driver Fund to Wayanad

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 7:47 PM IST

Updated : Aug 11, 2024, 8:50 PM IST

Woman auto driver donates funds to Wayanad People: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆட்டோ ஓட்டி நிதி வசூலித்து கொடுக்கும் சென்னையைச் சேர்ந்த பெண் ஆட்டோ ஒட்டுநர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ஆட்டோ ஒட்டுநர் ராஜி
ஆட்டோ ஒட்டுநர் ராஜி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கடந்த ஜூலை 30ஆம் தேதி, கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வயநாடு நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த நிலச்சரிவில் மீட்புக் குழுவினர், தன்னார்வாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகின்றனர்.

வயநாட்டில் தற்போது வரை மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வயநாடு பழைய நிலைக்கு வர உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் ஆதரவு வந்துகொண்டே இருக்கிறது. சாதாரண குடிமகன் முதல் பிரபலங்கள் வரை தங்களால் இயன்ற நிதி உதவிகளை செய்து வருகின்றனர்.

இரண்டு நாள் வருமானம்: அந்த வகையில், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநரான ராஜி என்பவர் தன்னால் முடிந்த நிதி உதவியை வயநாடு மக்களுக்கு செய்து வருகிறார். வாரத்தில் மிகவும் அதிகமாக சவாரியை தரும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் வரும் ஆட்டோ வருமானத்தை நேரடியாக கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு செலுத்தி வருகிறார்.

இதற்காக தனது ஆட்டோவில் விழிப்புணர்வு பதாகைகள், கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு நேரடியாக பணம் செலுத்தும் வகையிலான UPI வசதியை அவர் ஏற்படுத்தியுள்ளார். ஆன்லைன் பரிவர்த்தனை வசதி இல்லாதவர் வசதிக்காக உண்டியலையும் ஆட்டோவில் வைத்துள்ளார். முதற்கட்டமாக, வயநாடு மக்களுக்கு நிதி அளிக்கும் விழிப்புணர்வை சின்னத்திரை பிரபலம் பாலாவை வைத்து ராஜி துவக்கியுள்ளார்.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் ராஜி ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "வாடிக்கையாளர்கள் ஆட்டோவில் ஏறியவுடன் ஆன்லைனில் பணம் அனுப்புமாறும், கேரள நிவாரண நிதிக்காக அந்த பணத்தை அளிப்பதாகவும் தெரிவிப்பேன். அனைத்து வாடிக்கையாளர்களும் குறிப்பிட்ட சவாரிக்கான தொகையை விட கூடுதலாகவே பணத்தை செலுத்துகிறார்கள். இதுபோக வாடிக்கையாளர்கள் சிலர் அவர்களால் முடிந்த உதவிகளை தனிப்பட்ட முறையிலும் செய்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை இல்லாத நாட்களிலும் சவாரிக்காக வரும் வாடிக்கையாளர்கள் பலர் எனக்கான ஆட்டோ பணம் போக அன்றைய நாட்களிலும் நிவாரண நிதிக்கான பணத்தை தருகிறார்கள். ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்ய முடியாதவர்கள் உண்டியலில் பணத்தை போடுவார்கள்.

அடுத்தகட்டமாக வயநாடு நிவாரண நிதிக்காக விழிப்புணர்வு நோட்டீஸ் அடிக்க திட்டமிட்டுள்ளேன்.அதை வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கொடுத்து அதன் மூலம் யாராவது உதவ முன்வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். ஒருவர் ஒரு நாளைக்கு டீ குடிக்கும் பணத்தை வயநாடு மக்களுக்கு செலவிட வேண்டும். நம் குடும்பத்திற்கான பிரச்சனையாக நினைத்து உதவ அனைவரும் முன்வர வேண்டும்.

கேரள மாநில முதல்வர் நிவாரண நிதி சேகரிப்பதை நிறுத்தும்வரையும் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் வரும் வருமானத்தை நிவாரண நிதியாக அளிக்க உள்ளேன்" என்று உணர்ச்சி பொங்க கூறுகிறார் ராஜி.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:திமுக தலைமைக்கு கட்டுப்படாத கவுன்சிலர்கள்.. சவால்களை சமாளிப்பாரா நெல்லையின் சைக்கிள் மேயர்?

Last Updated : Aug 11, 2024, 8:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details