தமிழ்நாடு

tamil nadu

மயிலாடுதுறை வந்தடைந்த காவிரி.. வினாடிக்கு 1,100 கன அடி நீர் திறப்பு! - Cauvery water reached

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 10:43 PM IST

Cauvery Water: கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இன்றிரவு 8.10 மணியளவில் மயிலாடுதுறை மாவட்ட எல்லையை வந்தடைந்தது. நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி நீரை வரவேற்று பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்து, வினாடிக்கு 1,100 கன அடி வீதம் தண்ணீரை திறந்து விட்டனர்.

காவிரி நீர்
காவிரி நீர் (Credits - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: கர்நாடக மாநிலம், குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி நீர் பல்லாயிரம் மைல்கள் கடந்து கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் கடலில் கலக்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் கடந்த ஜூலை 28ஆம் தேதி திறக்கப்பட்டது.

இந்நிலையில், கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் மயிலாடுதுறை மாவட்டம் வந்து சேராததால் இன்று நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா பொலிவிழுந்தது. இந்நிலையில், இரவு 8.10 மணியளவில் காவிரி நீர் மயிலாடுதுறை மாவட்ட எல்லையை வந்தடைந்தது.

மாவட்ட எல்லையான திருவாலங்காடு, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள முதல் கதவணை நீர் தேக்கத்திற்கு வந்து சேர்ந்தது. நீர்வள ஆதாரத் துறையினர் உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் தலைமையில் காவிரி நீரை வரவேற்று பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்து வினாடிக்கு 1,100 கன அடி வீதம் தண்ணீரை திறந்து விட்டனர்.

மேட்டூர் அணையின் விதிகளின் படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூர் கடைமடை கதவணை பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர் மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும்.

இதன்படி, இன்னும் ஓரிரு தினங்களில் தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 94 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 48 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:கிராமங்களைச் சூழும் தண்ணீர்.. தத்தளிக்கும் திட்டு கிராமங்கள்.. மயிலாடுதுறையில் மீட்புப் பணிகள் தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details