தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு.. 19 காளைகளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு! - AVANIYAPURAM JALLIKATTU

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் முதலிடம் பிடித்தார். அவருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் கார்த்திக்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் கார்த்திக், ரூ.8 லட்சம் மதிப்புள்ள நிசான் கார் பரிசாக வழங்கிய அமைச்சர் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2025, 7:29 PM IST

Updated : Jan 14, 2025, 8:07 PM IST

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றுள்ள நிலையில், 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் முதலிடம் பிடித்து வெற்றிப் பெற்றுள்ளார். அவருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கி அமைச்சர் மூர்த்தி கௌரவித்தார்.

தை முதல் நாள் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று ஜனவரி (14) செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியை தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதலில் 10 தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் மொத்தம் 850 க்கும் மேற்பட்ட காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் களமிறங்கி விளையாடினர். ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக விளையாடியவர்களில் மூன்றிலிருந்து ஐந்து வீரர்கள் என மொத்தம் 30 வீரர்கள் இறுதிச்சுற்றிற்கு தேர்வாகினர்.

இறுதிச்சுற்றில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் முதலிடம் பிடித்தார். அவருக்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதனை அமைச்சர் மூர்த்தி வழங்கி சிறப்பித்தார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 15 காளைகளை அடக்கி இரண்டாமிடம் பிடித்த அரவிந்த் திவாகர் (ETV Bharat Tamil Nadu)

மதுரை குன்னத்தூரைச் சேர்ந்த அரவிந்த் திவாகர் 15 காளைகளை அடக்கி இரண்டாமிடம் பிடித்தார். அவருக்கு பைக் பரிசாக அளிக்கப்பட்டது.

அதேபோல், களத்தில் மிகச் சிறப்பாக விளையாடி முதலிடம் பெற்ற மலையாண்டி என்பவரின் காளைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக ரூ.12 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளை உரிமையாளருக்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் சார்பாக, கன்றுடன்கூடிய பசு மாடுகள் பரிசாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து, சிறந்த மாடுபிடி வீரருக்கான 2 ஆம் பரிசாக இருசக்கர வாகனத்தை, மதுரை குன்னத்துரைச் சேர்ந்த அரவிந்த் திவாகர் பெற்றார். சிறந்த காளைக்கான 2 ஆம் பரிசாக இருசக்கர வாகனத்தை, ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையைச் சேர்ந்த ஜி.ஆர் கார்த்திக் என்பவரின் காளைக்கு வழங்கப்பட்டது.

மாடுபிடி வீரர் மரணம்:

முன்னதாக, ஜல்லிக்கட்டு காளை தாக்கியதில் மதுரை விளாங்குடியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் நவீன்குமார் பலத்த காயமடைந்தார். மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்ககு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jan 14, 2025, 8:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details