தமிழ்நாடு

tamil nadu

சஞ்சீவ் சன்யாலின் நீதிமன்ற விடுமுறை கருத்து; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கண்டனம்! - Sanjeev Sanyal on Court holidays

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 10:02 PM IST

Bar Council: நீதிமன்ற விடுமுறைகள் குறித்து விமர்சித்த பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யாலுக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Sanjeev Sanyal
சஞ்சீவ் சன்யால், பி.எஸ்.அமல்ராஜ் (Credits - Sanjeev Sanyal 'X' Page & ETV Bharat Tamil Nadu)

சென்னை: இந்திய நீதித்துறையில் கோடை விடுமுறை, குளிர்கால விடுமுறை, தசரா விடுமுறை என தொடர் விடுமுறைகள் உள்ளதாகவும், இது அபத்தமானது எனவும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த கருத்துக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை நீதிபதிகளாக உள்ளவர்கள் நீண்ட நேரம் பணியாற்றுகின்றனர். நிர்வாகப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

நீதிமன்ற நேரத்துக்குப் பிறகும் நீதிமன்றங்களில் இருந்து பணியாற்றுகின்றனர் என்பது நீதிமன்ற நடைமுறைகளைப் பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும். ஆனால், வார இறுதி நாட்கள், விடுமுறை காலங்களில் தீர்ப்புகள் எழுதுவதிலும், திருத்தங்கள் செய்வதிலும் மட்டும் தான் நீதிபதிகள் செலவிடுகின்றனர் என்பது நிறைய பேருக்கு தெரியாது.

37 ஆண்டுகளுக்கு முன், 127வது சட்ட ஆணையம் பரிந்துரைத்தும், நீதித்துறைச் செலவினங்கள் இன்னும் திட்டமிடப்படாத செலவினங்களில் உள்ளது என்பது சஞ்சீவ் சன்யாலுக்கு தெரியும். 10 லட்சம் மக்கள் தொகைக்கு 50 நீதிபதிகள் என்ற விகிதாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும் என 1987ஆம் ஆண்டு சட்ட ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

கடந்த ஜனவரியில் லோக்சபாவில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் வெளியிட்ட அறிக்கையில், 10 லட்சம் மக்கள் தொகைக்கு 21 நீதிபதிகள் என்ற விகிதாச்சாரம் உள்ளது எனக் கூறியுள்ளது. இதன் மூலம் இரண்டு மடங்குக்கு அதிகமாக வழக்குகளை தற்போதைய நீதிபதிகள் கையாள்கின்றனர்.

நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வரும் நீதிபதிகளைப் பற்றியும், நீதித்துறை பற்றியும் பேச அதிகார அமைப்புக்கு எந்த விதமான தார்மீக உரிமையோ, சட்ட உரிமையோ இல்லை. 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சஞ்சீவ் சன்யால் கூறும் நிலையில், அதில் 73 சதவீத வழக்குகள் அரசு தாக்கல் செய்தது. பொறுப்பற்ற முறையில் நீதித்துறையை விமர்சித்துள்ள சஞ்சிவ் சன்யாலின் கருத்துக்கள் கடும் கண்டனத்துக்குரியது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:“அடுத்த தலைமுறை சரியில்லை எனக் கூறுவதில் நம்பிக்கை இல்லை” - கங்காபுர்வாலா பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details