சென்னை: "புத்துலகம் படைக்க புத்தகம் படிப்போம்" என அப்துல் கலாம் கூறிய வரிகளில் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள் ஆயிரம். ஒரு புதிய சிறந்த உலகத்தை படைக்கவும், ஒருவரின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தவும் இன்றியமையாத கருவியாக விளங்குகிறது புத்தகம்.
அப்படி, இந்த அறிவாயுதங்களை சேர்த்து வைத்திருக்கும் இடமான நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை புத்தக பதிப்பாளர்களிடமிருந்து தடையின்றி தமிழக அரசு வாங்க வேண்டும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக போட்டியில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் மாநில நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என 4 ஆயிரத்து 500க்கும் பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக தமிழக அரசு, நூலகத்திற்கான புத்தகங்களை வாங்காததால் புத்தக பதிப்பாளர்களின் வாழ்வாதாரம் கவலை அளிக்கும் விதமாக உள்ளது என ஆர்.எஸ்.சண்முகம் வேதனை தெரிவித்தார்.
மெத்தனப்போக்கில் தமிழக அரசு?: தொடர்ந்து பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளாக (2020-2024) புத்தக பதிப்பாளர்கள் பெரும்பாலானவர்கள் மிகவும் நெருக்கடியான சூழலில் உள்ளதாக தெரிவித்தார். நான்கு ஆண்டுகளாக தமிழக அரசு பதிப்பாளர்களிடம் இருந்து எந்த புத்தகத்தையும் வாங்காமல் உள்ளது. இதுகுறித்து கடந்த நான்கு வருடங்களாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பதிப்பாளர்களிடம் இருந்து புத்தகத்திற்கான ஆர்டரை இதுவரை அரசு எடுக்காமல் உள்ளது. தமிழக பொது நூலக இயக்குனர் இளம் பகவத்திடம் இதுகுறித்து கேட்டபோது, நூலகங்களுக்கு புத்தகம் வாங்குது தொடர்பாக புதிய சாப்ட்வேர் துவங்கப்பட இருப்பதாகவும் இதில் வெளிப்படைத்தன்மையுடன் புத்தகம் வாங்கப்படும் என கூறியதாக சண்முகம் தெரிவித்தார்.
நூலகங்களை கண்டுகொள்ளாத தமிழக அரசு:மேலும், தமிழ்நாட்டில் மாநில நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என 4 ஆயிரத்து 500 பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புத்தகங்கள் கேட்டு அரசிடம் இருந்து அழைப்பு வரும். பதிப்பாளர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள புத்தகங்களை 15 பேர் அடங்கிய கமிட்டிக்கு அனுப்ப வேண்டும்.
கமிட்டிக்கு அனுப்பும் ஒவ்வொரு நூலுற்கும் ரூ.100 செலுத்த வேண்டும் ஆனால் கடந்த 4 வருடங்களாக எந்த அழைப்பும் வரவில்லை. அது மட்டும் இல்லாமல் ஒரு புத்தகத்திற்கு ரூ.100 என முன்பு கொடுத்திருந்தோம் தற்போது அந்தத் தொகை 450 ரூபாயாக மாற்றப்பட்டு இருக்கிறது மீண்டும் பழைய முறையான ரூ.100 அரசு பெற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம் என்றும் சண்முகம் கூறினார்.
அதுமட்டும் இல்லாமல் தேசிய நூலகங்களுக்கு புத்தகங்களின் நகலையும் வழங்க வேண்டும். வட இந்திய நூலகங்களுக்கு அனுப்பப்படும் புத்தகத்தின் நிலை என்ன ஆனது என்றுகூட எங்களுக்கு தெரியாது. அத்துடன் கன்னிமரா,கலைஞர் மற்றும் அண்ணா நூலகத்திற்கும் நூல்களை அனுப்ப வேண்டி உள்ளது. அதோடு இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் புக் இன்டெக்ஸ் நம்பர் (ஐஎஸ்பி நம்பர்) வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.