சென்னை: சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, தனி விமானம் இன்று காலை 9.30 மணியளவில் டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை பெரம்பூரில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மாயாவதி அஞ்சலி செலுத்துவதற்காக, விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டார். சுமார் 10.45 மணியளவில் பெரம்பூர் பந்தர் கார்டன் மைதானம் சென்றடைந்த மாயாவதி, அங்கு வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மாயாவதியின் வருகையையொட்டி, வழிநெடுங்கிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.