திருநெல்வேலி:கன்னியாகுமரி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே மருத்துவக் கழிவுகள் மீண்டும் கொட்டப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் கேரளாவில் இருந்து ஆபத்தான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் அதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த நிகழ்வைத் தொடர்ந்து, மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை கடுமையான எச்சரிக்கையை விதித்திருந்தது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ரெட்டியார்பட்டி அருகே மீண்டும் மருத்துவ கழிவு கொட்டப்பட்டது. தொடர்பான வீடியோ இன்று வெளியானது. அதில் குறிப்பாக காலாவதியான மாத்திரை, டானிக் பாட்டில்கள் அதிகளவு கொட்டப்பட்டிருந்தது.
உள்ளூர் மருத்துவக் கழிவுகள்?
மேலும், மருத்துவ கழிவுகளை தீ வைத்து எரிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதி எரிந்த நிலையில் அவை இருந்ததால், கொட்டிய சமூக விரோதிகள் அதை எரிப்பதற்கு முயற்சி செய்து, பின்னர் கைவிட்டு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கழிவுகளை உடனே அகற்ற வேண்டும் எனவும் வலுவான கோரிக்கை எழுந்ததுள்ளது.
அதேசமயம், தற்போது கொட்டப்பட்டிருப்பது கேரள மாநில மருத்துவக் கழிவுகள் இல்லை என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். உள்ளூரைச் சேர்ந்த சில மருத்துவ நிறுவனங்கள் காலாவதியான மருந்து கழிவுகளை கொட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.